Monday, April 25, 2005

ஹினா- மட்சுரி


நம் நாட்டில் கொண்டாடப்படுவதைப்போலவே ஜப்பானிலும் 'கொலு' கொண்டாடப்படுகிறது. ஆனால், மார்ச் 3 ஆம் தேதிதான் 'ஹினா-நோ-செக்கு' அல்லது 'ஹினா-மட்சுரி' எனப்படும் ஜப்பானிய 'கொலு' கொண்டாடப் படுகிறது. ஹினா என்றால் பொம்மை, மட்சுரி என்றால் விழா . இதை 'சிறுமிகள் விழா' என்றும்கூடச் சொல்கிறார்கள். 'மோமோ-நோ-செக்கு' (Peach blossom's Festival) என்றும் அழைக்கப் படும் இந்த விழா பழம் சீனாவிலிருந்து வந்திருக்கிறது. உண்மையில் பீச் பூக்கள் மார்ச் மாதத்தொடக்கத்தில் முன்பெல்லாம் பூத்தன. ஆனால், இப்போதெல்லாம் பீச் பூக்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் தான் பூக்கின்றன. அப்போது ஆரம்பித்த விழா இன்றும் மார்ச் மாதமே தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.1603-1867 கால கட்டத்தில் இது ஜப்பானுக்குப் பரவியது. 'காடா' (Kada) கோவில் தான் இந்த விழாவிற்கான கோவில். 'கொடோ நோ ஹி' என்னும் சிறுவர்கள் தினத்திற்கு ஜப்பானில் பொதுவிடுமுறை உண்டு. ஆனால், 'ஹினா மாட்சுரி' என்னும் சிறுமிகள் தினத்திற்கு பொதுவிடுமுறை கிடையாது.

பழங்காலத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் என்று எல்லோருமே காகிதங்களை உபயோகித்து அவரவருக்குத் தோன்றிய பொம்மைகளைச் செய்தனர். அப்படிச்செய்யும்போது அவரவர் பொம்மைக்குள் அவரவரின் துரதிருஷ்டங்களையும் நோய்களையும் ஏற்றிவிடுவதாக நம்பப்பட்டுவந்தது. அந்த பொம்மைகளை பக்கத்தில் இருக்கும் ஆறுகளில் 'விசர்ஜனம்' செய்துவிடுவர். ஜப்பானின் கலை மற்றும் கலாசாரச்சேர்க்கையில் 'மோமோ-நோ-செக்கு' விழா உருவம் கொண்டது. படகுகளில் பொம்மைகளை ஏற்றி இன்றும் கடலை நோக்கிச் செலுத்தி சிறுமிகளின் துரதிருஷ்டம் மற்றும் திருஷ்டி போன்றவற்றைத் துரத்துகின்றனர். அவர்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வளர இந்தச் சடங்கு உதவும் என்பது நம்பிக்கை. மாலையில் அழகிய உடைகள் அணிந்த சிறுமிகள் விளக்குகள் (lanterns) ஏந்தி நடப்பதைப்பார்க்க அழகாய் இருக்கும். இன்றும் பெரியளவில் கொண்டாடப்படுகிறது. வேறு ஒரு நாட்டுப்புறக்கதையும் உண்டு. அதில் பொம்மை செய்பவன் மாடலாக இருந்துவந்த பெண்மீது காதல் கொள்கிறான். அதை நினைகூறவே விழா என்பதும் ஒரு நம்பிக்கை. வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாகவும் அமைந்த இந்த விழாவில் விருந்துக்கும் கோலாகலத்திற்கும் குறைவேயில்லை. 'சூஷி' (Sushi) எனப்படும் வினீகர் சேர்க்கப்பட்டும் செய்யப்படும் மீன் மற்றும் சாதத்தினால் ஆன பண்டம்தான் வழக்கம்போல விழாவின் முக்கிய உணவு. இதுதவிர பலவித மதுவகைகளும் உண்டு.

சிறுமிகள் தங்களின் எதிர்கால மகிழ்ச்சிக்காக விழாவை வீட்டில் கொண்டாடி மகிழ்வர். 'ஹினா நிங்க்யோ' என்னும் பொம்மைகளை அலங்கரித்து 'கொலு' வைக்கிறார்கள். அன்றாடம் கூடத்தை அலங்கரிக்கும் பொம்மைகளில்லை இவை. தலைமுறை தலைமுறையாய் வீட்டின் பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டு, வழிவழியாக வரும் பொம்மைகள். சில நாட்கள் இருக்கும் இந்தக்கொலு முடிந்ததும், அழகாகவும் பாதுகாப்பாகவும் அவற்றிற்குரிய பெட்டிகளில் அடுத்த வருடம் வரை வைத்துவிடுவர். ஒவ்வொரு வருடமும் வசதியுள்ளவர்கள் புது பொம்மைகள் வாங்குவதுமுண்டு. இந்தப் பொம்மைகள் ஹினமட்சுரி விழாவின் போதுதான் பார்வைக்கு வைக்கவேண்டும். மற்றநேரங்களில் வெளியே எடுத்தால், வீட்டுப் பெண்குழந்தைகளுக்கு கணவன் கிடைக்கமாட்டான் என்று நம்பப்படுகிறது.

பொம்மைகள் ஜப்பானில் அலங்காரப்பொருளாக மட்டுமில்லாமல், விளையாட்டுப்பொருட்களாகவும், தாயத்து போலவும், பஞ்சபூதங்களாகவும்கூட கொண்டாடப்படுகின்றன. நூற்றுக்கணக்கான வருடங்களாக பொம்மைகள் மாற்றங்கள் பலகண்டு வந்துள்ளன. இப்போதும் நவீன பொம்மைகளுக்கு நிகராக பாரம்பரிய பொம்மைகளுக்கும் வரவேற்பு இருக்கிறது. மார்ச் 3ஆம் தேதிக்கு முன்னர் கடைகளில் பொம்மை விற்பனை நடைபெறும். ஹினா பொம்மைகள் பெரும்பாலும் ஸெட்டாகவே விற்கப்படும். குறைந்தது 15 பொம்மைகளிருக்கும் ஒரு ஸெட்டில். அதில் குட்டிக்குட்டி வீட்டுச் சாமான்களும் அடங்கும். நுணுக்கமான தேர்ந்த கலைத்திறனோடு கூடிய வேலைப்பாடுகள் அமைந்திருக்கும் இந்த பொம்மைகளில். மிகவும் உயர்ரகமெனக் கருதப்படும் ஸேட், டைரி-சாமா என்னும் ஸெட்டாம். இதில் டைரி- பினா என்னும் அரச தம்பதியர் உயரகப் பட்டினால் ஆன அரசவை உடையில் இருப்பர். இரண்டு மந்திரிகள் மற்றும் மூன்று தோழிப்பெண்களோடு ஐந்து இசைக் கலைஞர்களும் இதில் அடங்குவர். பெரும்பாலும் ஐந்து அல்லது ஏழு படிகளில் அடர் சிவப்புத்துணியைப்போர்த்தி பொம்மைகள் அடுக்கப்படுகின்றன. படிகளுக்கு ஹினா-தன் என்று பெயர். அரசகுடும்பம் முதல் படியில் இருக்கும். தோழிப்பெண்கள், மரங்கள், தேநீர் பாத்திரங்கள் (டீ செட்) உணவுப்பொருட்கள் போன்றவை இரண்டாவது படியிலும், மற்ற பொம்மைகள் மற்றபடிகளிலும் அடுக்கப்படுகின்றன. சீர்வரிசைகளைக்குறிக்கும் வகையில் சின்னச்சின்ன பொருட்களும் வைக்கப்பட்டிருக்கும்.

ஆரம்ப நாட்களில் வைக்கோல், மற்றும் குச்சிகளால் பொம்மைகள் செய்யப்பட்டன. ஆனால், நவீன காலங்களில் பெருமளவில் கண்ணைக்கவரும் பொம்மைகள் உற்பத்தியாகின்றன. விலையுயர்ந்த பொம்மைகளும் சந்தையில் வந்துவிட்டன. மிகப் பிரபலமான பொம்மை கிமோனோ உடையணிந்த ஒடைரி-சாமா என்னும் இளவரசனும் ஓஹினி-சாமா என்னும் இளவரசியும் தான். கொகேஷி என்னும் வகை பொம்மை தனியாகக் கை மற்றும் கால்களில்லாமல் உடலோடு ஒட்டி வரையப்பட்டிருக்கும் எளிய வடிவம் கொண்டது. பெரிய தலையும் உடலும் கொண்டது. மரத்தாலான இந்தவகை பொம்மைகள் டொஹோகு என்றறியப்படும் வடக்கு ஹோன்ஷ¤வில் தயாராகிறது. கிட்டத்தட்ட நமது மரப்பாச்சி பொம்மையை ஒத்திருக்கும். ஆனால், மேடுபள்ளமில்லாமல் மொழுமொழுவென்று இருக்கும். இவை டோகுகாவா சகாப்தத்தில் வசந்த ஊற்றுக்களுக்கு வருகை தந்த சுற்றுப்பயணிகளுக்கு நினைவுச் சின்னங்களாகப் பரிசளிக்கப்பட்டனவாம். பெரும்பாலும் சிறுமிகளையே குறிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன. ஹகடா பொம்மை மண்ணால் ஆனது. இவ்வகை பொம்மைகள் க்யூஷ¤விலிருக்கும் ·புகுஒகுவால் தயாரிக்கப்படுகின்றன. இவை நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு, வண்ணங்கள் தீட்டப்பட்டிருக்கும். புன்ராகு பொம்மை பாரம்பரிய பொம்மலாட்ட வகை. தாருமா பொம்மை உருண்டை வடிவம் கொண்ட சிவப்பு பொம்மை. இதற்குக் கண்களில் கருவிழி இருக்காது. இது போதிதர்மரைக் குறிக்கும் பொம்மை. இவர் நீண்ட நாட்களுக்குத் தவம் செய்ததில் கால்கள் பயனற்றுப்போயினவாம். டகசகியில் இருக்கும் கும்மா என்னும் நிறுவனத்தினரால் கையாலேயே செய்யப்படும் பொம்மைகள் இவை. பெரும்பாலும் புதுவருடத்தில் மனதில் ஒரு வேண்டுதலோடு இந்த பொம்மைக்கு ஒரு கண்ணில் கருவிழி வரைவர். அந்த வேண்டுதல் நிறைவேறினால், அடுத்து வரும் புதுவருடப்பிறப்பன்று மற்றொரு விழிக்கும் கருவிழி வரைவார்கள். பூனைபொம்மைகள் பணப்பெட்டிக்கு அருகில் இருந்தால் காசு கொட்டும் என்பது நம்பிக்கை. கொலுவைச்சுற்றி இருக்கும் மற்ற அலங்காரங்கள் நவீனமாகிக்கொண்டு வருகின்றன. எப்போதும் பீச் பூக்களும் அலங்காரத்தில் உண்டு.

உலகப்போருக்குமுன் ஜப்பானியச் சிறுமிகள் தங்கள் சிநேகிதிகளை அழைத்து விருந்துவைக்க இந்த விழாவை ஒரு சந்தர்பமாகக் கருதினர். சிறுமிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு விருந்து படைக்கும் இந்தச் சடங்கு உண்மையில் சிறுமிகளுக்குக் கொடுக்கப்படும் 'விருந்தோம்பல்' பயிற்சி என்றே கொள்ளப் பட்டுகிறது. சிலவேளைகளில் அவர்களே சமைத்து பொம்மைகளுக்குப் படைத்தனர். விருந்தில் ஷிரோஜாக்கே என்னும் இனிப்பு அரிசி வய்ன் குடித்தனர். பொம்மைகளுக்குப் படைத்தவற்றில் முக்கியமானவை அரிசிமாவில் செய்த டைமண்ட் வடிவ கேக், பழவடிவ பர்பி, சிவப்புப்பயறு சேர்த்த சாதம் போன்றவை. சின்ன சொப்புகளில் விருந்தினராய் வந்திருக்கும் மற்ற சிறுமிகளுக்கு இந்த உணவு வழங்கப்பட்டது. சிறுமிகளின் வண்ணவுடைகளும் கொலுவின் அழகிய வண்ணமும் விழாவைக்கோலாகலமாக்கின. இன்றும் கிராமப் புறங்களில் ஹினமட்சுரி பொம்மைகளையும் படிகளையும் பாதுகாத்து வைத்துக்கொள்கிறார்கள். மணமாகிப் புக்ககம் போகும்போது பெண் இவற்றைத் தன் புக்ககத்திற்குக் கொண்டு செல்கிறாள்.

பெண்குழந்தைகள் இல்லாதவர்களும் கூட ஆர்வம் காரணமாக சிறிய அளவிலேனும் கொலு வைக்கிறார்கள். ஒரு சிறுமியின் முதல் ஹினா மாட்சுரியை (கொலுவை) 'ஹட்சு- ஜெக்கு' என்றழைக்கிறார்கள். சிறுமியின் தாத்தாபாட்டி அவளுக்கு கொலுப்படிகளோடு ஒரு ஸெட் பொம்மையைப் பரிசளிப்பர். பிப்ரவரி மத்தியிலேயே கொலு வைக்க ஆரம்பித்து மார்ச் 3 ஆம் தேதி எடுத்து வைத்துவிடுவர். எடுத்து வைப்பதில் தாமதிக்கும் வீட்டுப்பெண்களுக்குத் திருமணம் தடை படும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. விழா சிறுமிகளின் ஆரோக்கியம் மற்றும் மேன்மைக்காகவென்று நம்பப்படும் இந்த விழாவைப்பற்றி மற்றும் பலவிதமான நம்பிக்கைகளும் அர்த்தங்களும் நிலவுகின்றன. பெற்றோரைக்காத்தல்/பேணுதல், மூதாதையரை வணங்குதல் போன்ற நன்னெறிகளை வலியுறுத்துவதாகவும் சொல்லுப்படுகின்றது. ஜப்பானியர்களுக்குக் குழந்தைகளிடமிருக்கும் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் விழாவாகவும் கொள்கிறார்கள்.

க்யோட்டோவிலிருக்கும் அருங்காட்சியகம் பொம்மைகளைப்பற்றியும் 'ஹினா மட்சுரி' பெற்ற பரிணாம வளர்ச்சி பற்றியும் விவரிக்கும் படங்களைக்கொண்டுள்ளது. ரிங்கியா என்றழைக்கப்படும் ஏலக்கடை இவ்விழா தொடர்பான பாரம்பரிய பொம்மைகளுக்குப் பெயர்போனது. 1990 ல் வெளியான அகிரா குரோசவாவின் 'யுமே' (Yume) என்னும் திரைப்படத்தில் இந்த ஹினா என்னும் கொலு மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் ஜப்பானியக் கலாசாரத்தையும் ஜப்பானின் இயற்கைச்சூழலையும் மையமாகக்கொண்டு இரண்டின் தொடர்பைக் குறித்துப்பேசும் காவியம். சிறுவன் ஒருவன் தன் குடும்பத்தின் பீச் தோட்டம் பறிபோனதைக் குறித்து வருந்திக் கொண்டிருப்பான். அப்போது தன்னையே உற்சாகப் படுத்திக் கொள்ள தன் சகோதரி படிகளில் அலங்கரித்து வைத்துள்ள 'ஹினா- மாட்சுரி' பொம்மைகளில் சில உயிர்பெற்று நடமாடுவதாகக் கற்பனை செய்வான்.

ஜனவரி 1927 ல் மிஸ். அமெரிக்கா மற்றும் 48 அமெரிக்க மாநிலங்களைக்குறிக்கும் 48 பொம்மைகளும் பொம்மைத் தூதுவர்களாக அமெரிக்காவிலிருந்து நல்லெண்ண அடிப்படையில் தோக்கியோவிற்கு அனுப்பப்பட்டன. இம்பீரியல் எடுகேஷன் மியூசியம் என்னும் அரச அருங்காட்சியகத்தில் இருக்கும் இரட்டை மாடி பொம்மை வீட்டில் வசிக்கின்றன இந்த பொம்மைகள். இவற்றிற்குக் கோலாகல வரவேற்பு நடந்தது ஜப்பானில். இந்தப்பொம்மைகளை வரவேற்கவென்று ஒரு 'நல்வரவுப் பாடல்' போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் கொரியச்சிறுமி வென்றாள். வென்ற பாடல் ஜப்பானிய இசைஞர்களால் இசையமைக்கப்பட்டுப் பாடப்பட்டது. நீலவிழிகளுடைய இந்தப் பொம்மைகள் பார்க்கவும் தொடவும் அற்புதம். நேர்த்தியோட வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பொம்மைகள் பெரியவர்களையும் கவரக்கூடியவை. அமெரிக்க நட்பு பொம்மைகள் கிடைத்துவுடன் ஜப்பான் நன்றி தெரிவிக்கும் வகையில் அமெரிக்கக் குழந்தைகளுக்கு 12,000 திற்கும் மேற்பட்ட பொம்மைகளை அனுப்பியது. அதைத்தொடர்ந்து மார்ச் மாதம் மேலும் 12,739 அமெரிக்க பொம்மைகள் ஜப்பானின் ஒசாகாவை வந்தடைந்தன. ஒவ்வொரு பொம்மையும் சின்ன பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட் வைத்திருந்தன. அதோடு அமெரிக்கக்குழந்தைகளின் செய்தியடங்கிய மடலும்.

விழாமுடிந்தபிறகு பொம்மைகள் நாடெங்கும் இருக்கும் பாலர் மற்றும் தொடக்கப்பள்ளிப் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்டன. தங்களுடைய சொந்த பொம்மைகளைக்கொண்டுவந்து அவற்றையும் படிகளில் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஈராயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிச் சிறார்கள் ஜப்பானியக் குழந்தைகளைப் பிரதிநிதித்து விழாவில் கலந்துகொண்டனர். அதே எண்ணிக்கையில் அமெரிக்கக் குழந்தைகளும் விழாவில் பங்கேற்றனர். ஒவ்வொருவர் கையிலும் ஒரு பொம்மை கொடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் முழுமையான புரிந்துணர்வு மற்றும் நட்பு நீடிக்க இந்த விழா மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று எல்லோரும் நம்பினர். அவ்வகையுணர்வுகளை இளையதலைமுறையிடையே தோற்றுவிக்கும் நோக்கமும் இதில் அடங்கும். உலகின் மற்ற விழாக்களைப் போலவே காலத்திற்கு ஏற்றாற்போல ஹினா-மாட்சுரியின் நோக்கங்களும் அர்த்தங்களும் மாற்றங்களைக் கண்டு வருகிறது.

(முற்றும்)

நன்றி: உயிர்மை மார்ச் 2005
& திண்ணை

-----ஜெயந்தி சங்கர்

2 comments:

Vijayakumar said...

ஜப்பானிய விழாவைப் பற்றிய நல்ல ஒரு தகவல். லேண்டர்ன் பெஸ்டிவல் என்று சிங்கப்பூரிலும் உள்ளதே. சீனாவிலும் லேண்டர்ன் பெஸ்டிவல் புகழ் பெற்றதோ?

பத்ம ப்ரியா said...

Excellent essay, it is more informative and those pictures adding value to your essay.

Write more like this.
M. Padmapriya