Wednesday, March 23, 2005

நூல் அறிமுகம்


-------------------------------
'Ladies Coupe'
by Anita Nair
அனிதா நாயர்
எழுதிய 'லேடீஸ் கூபே'


First published by
Penguin Books India 2001
-------------------------------



'ஒரு பெண், ஓர் ஆணின் துணையின்றி தனியே வாழ்க்கையைச் சமாளிக்க முடியாதா (கூடாதா)?'

கதாநாயகி நாற்பத்தைந்து வயது அகிலா என்றழைக்கப்படும் அகிலாண்டேஸ்வரி. வீட்டின் மூத்த பெண். அவளின் கேள்விதான் அது.

இதற்கான 'தேடல்' அவளில் தீப்பொறியாகக் கிளம்பிப் பின் கனன்று எரிந்த படியிருகிறது அவளது இளம் வயதுமுதலே. அவள் திடீரென்று ஒரு பையைத் தூக்கிக்கொண்டு கன்யாகுமரியை நோக்கிக் கிளம்புகிறாள். தேடல் பயணம், இரயில் பயணத்தில் தீவிரம் கொள்கிறது. மொத்தத்தில் சுதந்திரத்தையும் மனோபலத்தையும் தேடும் ஒரு பெண்ணின் கதை இந்த 276 பக்கங்கள் கொண்ட நாவல்.

நாவலின் தலைப்பே கதையின் களத்தைச் சொல்கிறது. ஆமாம், கன்யாகுமரிக்குச் செல்லும் இரயிலின் ஒரு லேடீஸ் கூப்பே தான் களம். உண்மையில் அப்படியும் சொல்லவிடமுடியாது. காரணம், அங்கே அகிலா உடன் பயணிக்கும் ஐந்து பெண்களைப் பரிச்சயப்படுத்திக்கொண்டு அவரவர் கதையைக்கேட்கிறாள். ஆகவே, பாத்திரங்கள் சந்திக்கும் இடம் தான் இரயிலின் லேடீஸ் கூபே. மற்றபடி அவரவர் கதை சென்னை, கொடைக்கனால், பெங்களூர், காஞ்சீபுரம் என்று போய் மீண்டும் லேடீஸ் கூபேவுக்கே திரும்புகிறது. உள்ளங்கையில் தாங்கும் கணவன் உள்ள குழம்பிய மனைவி ஜானகி, அசாதாரண புரிந்துணர்வுடடனான 14 வயதான ஷீலா, தன் தேவையென்னவென்றே புரிந்துகொள்ளாத கெமிஸ்ட்ரி டீச்சர் மார்கரெட் ஷாந்தி, ஒரே இரவில் தன் வெகுளித்தனத்தை மொத்தமாய்த் தொலைத்த மரிக்கொழுந்து மற்றும் நல்ல மகளாயும் மனைவியாயும் விளங்கும் ப்ரபாதேவி ஆகிய ஐவரின் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை தான். ஒவ்வொன்றும் தன் கதையைப்போன்றே இருப்பதைப்போலவும் அதே சமயம் தன்னுடையதிலிருந்து வேறுபட்டிருப்பதைப்போலவும் உணர்கிறாள் அகிலா.

'Ladies Coupe' - A Novel In Parts என்று தான் இரண்டாம் பக்கத்தில் தலைப்பே கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் அனிதா நாயர் நூலின் கடைசி பக்கத்தில் 1998 க்குப்பின் இந்திய இரயில்களில் லேடீஸ் கூபே இல்லாமல் இருப்பதாய் ஒரு குறிப்பும் கொடுத்துவிடுகிறார். அனிதா வசிப்பது பெங்களூர். இவரின் இன்னொரு நாவல் 'The Better Man' னாம். தேடிப் படிக்கவேண்டும்

86 வது பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும், 'From the Gurukula stage of life, she had moved directly to Vanaprastha. And she wanted no part of some one else's karmic flow', என்ற வரிகள் அகிலாவை மிகவும் நன்றாகவே வாசகனுக்குப் பரிச்சயப் படுத்துகின்றன. ஒரு தாயின் தவிப்போ ஒரு பதின்மவயதுப் பிள்ளையின் மனநிலையோ அவளுக்குக் கொஞ்சமும் பிடிபடாதிருக்கின்றது. காரணம், அவளின் வாழ்க்கை முறை. குடும்பத்திற்காக உழன்று உழன்று அகிலாவுக்கு வெளியுலகைப்பார்க்கும் எண்ணமும் அனுபவங்கள் சேகரிக்கும் துடிப்பும் வலுக்கின்றன. இலக்கில்லாமல் எங்கேயாவது போகவேண்டும் என்று தான் முதலில் நினைக்கிறாள். 'எங்கேயாவது போனால் போதும்' என்ற நிலைக்கு வந்தபின் பெரிதாய் யோசிக்காமல் சட்டென்று கன்யாகுமரியைத் தேர்ந்தெடுத்துவிடுகிறாள்.

திடீரென்று கிளம்பும் போது அகிலாவைப்பார்த்து அவளைவிடப் பத்து வயதுக்கும் மேல் இளையவளான அவளுடையை தங்கை பத்மா கேட்கிறாள்." நாராயணன் அண்ணா, நரஸி அண்ணா வந்தா நீ திடீர்னு தனியாக கிளம்பிப்போறதப்பத்தி என்ன சொல்லுவாளோ?,.." பெண் தனியே கிளம்பினால், நடுத்தர பிராமணக்குடும்பத்தில் ஏற்படக்கூடிய சந்தேகங்களும் பயங்களும் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவளின் வயது, முதிர்ச்சி,அறிவு,பதவி ஆகியவை கடந்து கேள்விகள் முளைக்கவே செய்கின்றன. பலநாட்கள் யோசித்து யோசித்துக் களைத்திருந்த அகிலா கூட்டிலிருந்து கிளம்பும் பறவையின் உணர்வோடு, தங்கையின் கேள்விக்கு ஒருவித எதிர்வினையும் செய்யாது ஒற்றைப் பார்வையை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டு ஆட்டோவில் ஏறிவிடுகிறாள்.

கண்டோன்மெண்டில் தோழி நிலோ·பர் டிக்கெட்டுடன் காத்திருக்கிறாள். அங்கே டிக்கெட் கௌண்டர்கள் பற்றி விவரிக்கும் போது -

Akhila read the board above the line,' Ladies, Senior citizens and Handicapped Persons". She did not know if she should feel angry or venerated. There was certain old fashioned charm, a rare chivalry in this gesture by the Railway Board that pronounced a woman shouldn't be subject to the hustle and bustle, leacherous looks and grouping hands, sweaty armpits and swear words that were part of the experience of standing in the General Queue. But why spoil it all by clubbing woman with senior citizen and handicapped persons?Akhila stifled and looked for Niloufer.

இதுபோன்ற சிந்தனையைத் தூண்டும் ஆழமான வரிகள் ரசிக்கும்படி நாவலெங்கும் வருகின்றன.

சீரான கதையோட்டம். அகிலாவோடு நாமும் தேடலில் நம்மையறியாது பங்குகொள்வதைத் தவிர்க்கமுடியாது போகிறது. நீண்ட வாசகபயணம் என்றபோதிலும் சோர்வு தெரியவில்லை . ஓவ்வொரு அத்தியாயத்திலும் அகிலவுக்கு 'விடை' கிடைத்திருக்கிறதா என்ற 'விடை' தேடும் ஆவல் வாசகனையும் தொற்றிக்கொள்கிறது.

ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொள்ளும்போது, திருமணம் குழந்தைகள் போன்ற பேச்சு எழும் போது, அகிலா தான் மணம் புரியாத காரணத்தைச் சொல்லநேர்கிறது. சகபயணிகளிடம் அகிலா மனம் திறக்கிறாள். அத்துடன் தன் கேள்வியையும் அவர்கள் முன் வைக்கிறாள். உண்மையில் இதெல்லாமே மிக இயல்பாக ஆரஞ்சுப்பழங்களைப் பகிர்ந்துண்ணும் போதே நடந்துவிடுகிறது. ஒருவரின் கருத்து மற்றவருக்குப் பொருந்தவேண்டிய அவசியமில்லை என்று எல்லோருமே சொல்லிக்கொள்கிறார்கள். இருந்தாலும், அவரவர் கருத்தாகச் சொல்லாமல் அவரவர் வாழ்க்கையின் அனுபவங்களைச் சொல்வதன் மூலம் தன் சிந்தனைக்கு உதவ முடியும் என்று அகிலா விடாமல் வற்புறுத்திக் கேட்கும் போது மற்றவர்களும் 'இரயில் சிநேகம் தானே, நாம் தான் இனிமேல் சந்திக்கப்போவதில்லையே', என்ற எண்ணத்துடன் தைரியமான மனம் திறந்து அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தன் இயல்புக்கு எதிராய்த் தானே வலியபோய் பேசி, மற்றவரையும் பேசவைப்பதைப்பார்த்துத் தானே வியந்து கொள்கிறா¡ள் அகிலா உள்ளுக்குள்ளே. ஆரஞ்சின் மணமும் இரயில் ஜன்னலில் இருந்த 'துரு' மணமும் பிற்காலத்தில் தன் நினைவுகளோடு சேர்ந்து வரும் என்றும் நினைத்துக்கொள்வாள்.

ஆபீஸ்போய் மட்டுமே பழக்கப்பட்ட தன்னால் இத்தனை வயதிற்குமேல் ஒரு வீட்டை நிர்வகிக்க முடியுமா என்ற சந்தேகம் அகிலாவிற்குள் எழுகிறது. ஒவ்வொரு விநாடியையும் கட்டினவனுக்காகவே வாழ்வது சலிக்காதா, அதுதான் ஒற்றுமையைப் பலப்படுத்துமா என்றெயெல்லாம் அப்பெண்களிடம் கேட்கிறாள்.

எப்போதும் தான் உழைக்க மற்றவர் இளைப்பாறியதுபோக, இரயில் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்க தான் உறங்குவது சுகமென்று உணர்கிறாள். பாதுகாப்பாகக்கூட உணரமுடிகிறது அவளால். விநோத கனவொன்றும் காண்கிறாள்.

அகிலா வளர்ந்த சமூகத்தில் பெண்ணின் நிலையும் அவளில் புகுத்தப்படும் எண்ணங்களும் அவளை கிட்டத்தட்ட ஒரு ஜடப் பொருளாக்கிவிடுகிறது. மறுபடியும் மறுபடியும் சொல்லப்பட்டு, பெண்ணைவிட ஒரு படி உயர்ந்தவன் ஆண் என்று அவள் உள்ளத்தில் பதியவைக்கப்படுகிறது. முதிர்ச்சியடையும் நிலையில் அவ்வெண்ணங்களுக்கு எதிராகத் தன் சிந்தனை விரிவதை அவள் உணர்கிறாள். நடைமுறை என்று வரும்போது பழமையிலிருந்தும் சமூகப்பார்வையிலிருந்தும் விலகிவிடமுடியாது என்றுணர்ந்து திணறுகிறாள். ஆகவேதான் அகிலாவுக்குத் தன்னைப்பற்றி சிந்திக்கும்போதெல்லாம் பலவிதமான குழப்பங்கள் ஏற்படுகின்றன

Amma had her own theories on what a good wife ought to be like. First of all no good wife could serve two masters- the masters being her father and her husband. A good wife learnt to put her husband's interest before anyone else's, even her father's. A good wife listened to her hasband and did as he said. "There is no such thing as equal marriage," Amma said. " It is best to accept that the wife is inferior to the husband. That way, there can be no strife, no disharmony. It is when one wants to prove one's equality that there is warring and sparring all the time. It is so much easier and simpler to accept one's station in life and live accordingly. A woman is not meant to take on a man's role. Or the gods would have made her so. So what is this about two equals in marriage?

இப்படிச்சொன்ன அம்மாதான் அகிலாவின் அப்பா இறந்ததும் அந்த இடத்தில் அவளை வைத்துப்பார்க்கிறாள். அதில் அம்மாவுக்கு உறுத்தலில்லை. அவளை ஒரு பெண்ணாகப் பார்ப்பதையே நிறுத்திவிடுகிறாள். இத்தனைக்கும் எதிர்பாராது நிகழும் அப்பாவின் சாவுவரை, அதாவது அகிலாவின் பதின்மவயதின் இறுதி வரை அம்மா அவளைத் திருமணத்திற்குத் தயார்செய்யும் வகையில் தான் வளர்க்கிறாள். பார்க்கிறாள். அம்மாவின் பார்வையிலும் குடும்பத்தின் மற்றவர் பார்வையிலும் அதன்பிறகுதான், வீட்டிற்கு உழைத்துப்போடும் ஆணாகிவிடுகிறாள் அகிலா. தனியாக வசிக்க நினைத்தாலோ, பிரயாணம் செய்ய நினைத்தாலோ மட்டும் அகிலா பெண் என்ற நினைவும் குடும்பத்திற்கும் தங்கள் சமூகத்திற்கும் கெட்டபெயர் வந்துவிடும் என்ற அக்கறையுடனான எதிர்ப்புகள் கிளம்பும்.

ஆங்காங்கே அகிலாவின் சிறுவயது சம்பவங்கள் நினைவலைகளாக வருகின்றன. படிக்க மிகவும் சுவையாக இருக்கின்றன. அகிலாவின் அப்பா மரணம், இரயில்வே ஸ்டேஷன், கோடை நாள், குடும்பத்தின் ஞாயிறு என்று ஏராளமான சுற்றுச்சூழலை விவரிக்கும் விதம் காட்சிகள் அப்படியே நம் கண்முன் விரிகின்றன. அப்பா லஞ்சம் வாங்குவது கிடையாது. தன் கொள்கையில் தீவிரமாயிருக்கிறார். அதுவே அவரைச்சுற்றியுள்ள அலுவலக ஊழியர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. இந்தப் பின்னணியின் காரணமாய் அப்பாவின் சாவு சாலை விபத்தில்லையோ, ஜோடிக்கப்பட்டு செய்த கொலையோ என்று சந்தேகிக்கிறாள் அகிலா.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது ஆங்கிலப்புத்தகத்தைப்படிக்கும் உணர்வே எழுவதில்லை. தமிழ் புத்தகம் படிக்கும் உணர்வே எழும். அதற்குக்காரணம் எளிய ஆங்கிலம் மட்டுமல்ல, கத்தயின் களம் தமிழ்நாடு என்பது மட்டுமல்லாது பாத்திரங்கள் எல்லோருமே பெரும்பாலும் மிகச்சாதாரணமாக நாம் சந்திக்கும் தமிழ்ப்பெண்களே. 'கரு' வேண்டுமானால் கனமானதாய் இருக்கலாம். ஆனால், மொழி ஒரு தொடக்கநிலைப் பள்ளி மாணவனுக்கும் புரியக்கூடியது.

முக்கிய கிளைக்கதையான சரசா மாமியும் மகள்கள் மற்றும் சக பயணிகளான பெண்களின் தனிக்கதைகள், சிறுசிறு கிளைக் கதைகள் பற்றியெல்லாம் எழுதினால் கிட்டத்தட்ட முழுநாவலையும் கொடுத்ததுபோன்ற தோற்றம் வரக்கூடிய அபாயம் இருப்பதால், இங்கு அவற்றின் உள்ளே போகவில்லை. அவை ஒவ்வொன்றும் நாவலின் முக்கிய பகுதிகள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நாவலாசிரியர், கதை மாந்தரின் இயல்புக்கேற்றவாரு மொழியை மாற்றிக்கொள்வது ரசிக்கும் படியுள்ளது. அகிலா உட்பட எல்லோரது கதையும் படர்கையில் கூறப்பட்டிருக்கிறது. மரிக்கொழுந்து மற்றும் மார்கரெட் ஷாந்தி ஆகியோரது கதைகள் மட்டும் தன்மை ஒருமையில் கூறப்பட்டிருக்கின்றன. இதன் சூக்ஷமம் ஆராய்ச்சிக்குரியது என்றே தோன்றுகிறது. மார்கரெடின் மொழியும் ரசாயனம் சார்ந்தது. தன்னைச்சுற்றியுள்ள ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பொருத்தமான கெமிகல் பெயர் கொடுத்துப் பேசுகிறார். இது பாத்திரத்தின் சிந்தனை ஓட்டத்திற்கு வலுச்சேர்ப்பதுடன் கையோட்டத்திற்கு நகைச்சுவை சேர்க்கவும் செய்கிறது.

காதல் மற்றும் திருமணம் பாதுகாப்பானது என்று ஜானகியும், அவை மாறக்கூடியது என்று மார்கரெட்டும் அகிலாவுக்குச் சொல்கிறார்கள். ஜானகி இரயிலைவிட்டு இறங்குமுன், "எது செஞ்சாலும் ரொம்ப நல்லா யோசிச்சு செய். அதுக்கப்புறமா இறந்தகாலத்தை நினைத்து ஏங்காதே," என்று சொல்கிறார். மார்கரெட், " Just remember that you have to look out for yourself. No one will", என்கிறாள் கடைசியாக இறங்கும்முன்.

அகிலா வளர வளர அவளுக்குத் தன் பெற்றோரிடையே நிலவும் அதீத 'அன்யோன்யம்' அசௌகரியத்தைக்கொடுக்கிறது. ஒரு வித பாதுகாப்பின்மையைக் கொடுக்கிறதாம். The children of lovers are no better than orphans என்கிறார் படைப்பாளி அகிலாவின் மூலம். எத்தனை யோசித்தும் 'இப்படியும் தோன்றுமா என்ன?' என்றுதான் தோன்றியதே தவிர கதாசிரியரின் கூற்று மட்டும் எனக்குப் புரியவில்லை.

வருமானவரித்துறையில் க்ளார்க்காகப் பணியாற்றும் அகிலா பதின்மவயதில் தன் தந்தையை இழந்ததும், குடும்பச் சுமையை ஏற்று தங்கை தம்பிகளுக்கு வாழ்க்கைப்பாதைகளை வகுத்துக் கொடுத்துவிட்டு தன்னைப்பற்றி நினைக்கும்போது வயதாகிவிடுகிறது. அப்பா இறந்ததும் அவரது இலாகாவிலேயே அதே பதவி அவளுக்குக் கிடைத்துவிடுகிறது. அம்பத்தூரிலிருந்து தினமும் ஆபீஸ் போகிறாள் இரயிலில்.

ஆபீஸ் போகும் போது அகிலா கட்டும் கஞ்சிபோட்ட பருத்திப்புடைவைப்பற்றி கூறும் போது நாவலாசிரியர் மிகவும் சுவைபட எழுதுவது-

When she tucked the last pleat in at the waist and flung the pallu over her shoulder, the bottom of the sari hiked up her legs playfully, so that the last thing Pama did before Akhila left home was to crouch at her feet and teach the sari the laws of gravity. Tug, tug, what goes up has to come down and stay there. By evening, the sari had neither the vitality nor the starch to resist the pull of the earth.

மாலைக்குள் வியர்வையிலும் இரயில் கூட்டத்திலும் இடிபட்டுக் கசங்கித் துவண்டுவிடுமாம். இதுபோன்ற லேசான நகைச்சுவை இழையும் இடங்கள் ஏராளமாய் நாவலில் உண்டு.

சின்னத்தம்பி நரஸிம்மன் தானே தேர்ந்தெடுத்த பெண்ணை மணக்க நினைக்கும்போது பெரிய தம்பிக்குப் பெண் பார்க்க நினைக்கிறாள் அகிலா. ஆனால், அவளின் திருமணம் பற்றியோசிக்க யாருக்கும் தோன்றுவதேயில்லை. கடைக்குட்டி பத்மா பெரியவளாகும்போது அகிலாவிடமே பெண்ணின் பெருமையையும் அழகையும் அலங்காரத்தையும் பறைசாற்றும் அம்மா, அகிலாவை ஒரு பெண்ணாகவே நினைக்கத்தவறிவிடுகிறாள். வீட்டுத் தலைவன் பதவி ஏற்றுக்கொள்ளும் அகிலாவை அவள் அம்மா பேர் சொல்லிக்கூப்பிடாமல் 'அம்மாடி' என்றழைக்க ஆரம்பித்திருந்ததையும் ஆபீஸில் 'மேடம்' என்றழைப்பதையும், வீட்டில் தங்கை தம்பிகள் 'அக்கா' என்றழைப்பதையும் யோசித்துப்பார்க்கும் 'அகிலா' என்ன ஆனாள்?, 'அகிலாண்டேஸ்வரி என்ன ஆனாள்?' என்றெல்லாம் யோசித்துத் தன்னையே தேடுகிறாள். ஒருமுறை தன் அம்மாவோடு தமிழ் படம் ஒன்றைப்பார்க்கிறாள். படைப்பாளி, 'அவள் ஒரு தொடர் கதை' என்று படத்தின் பெயரைச் சொல்லாமலே படிக்கும் நமக்குப்புரிந்துவிடுகிறது. அன்று முழுவதும் படக்கதாநாயகியில் தன்னைப்பொருத்திக்கொண்டு யோசிக்கிறாள். அம்மாவோ அன்று முழுவதும் பெண்ணின் பார்வைத் தவிர்த்துவிடுகிறாள்.

இரயில் சிநேகமாகத் தொடங்கிக் காதலாகும் அகிலாவின் ஹரியும் கதையில் வருகிறான். அவன் தன் இளைய சகோதரனைவிட இளையவன் என்பதை அறிந்தே காதலிக்கிறாள். மணம் முடிக்கவும் நினைக்கிறாள். வீட்டில் அலுவலக நண்பர்களோடு மைசூர் போவதாய்ச் சொல்லிவிட்டு மஹாபலிபுரம் சென்று அவனுடன் கூடவும் செய்கிறாள். கிளம்புமுன் தம்பியாகவே இருந்தாலும் ஆண் என்ற காரணத்தால் அவனிடம் சொல்லி அனுமதிபெற்றுத்தான் போகவேண்டும் என்று அம்மா சொல்கிறாள். அகிலாவிற்கு இதுபோன்ற தருணங்களில் கோபமும் எரிச்சலும் வருகிறது.

ஹரியுடன் அவள் இருக்கும்போது மற்றவர்களின் கேள்வி ஏந்திய 'பார்வை' அகிலாவை அசௌகரியமாக்குகிறது. இருவரிடையே இருக்கும் வயது வித்தியாசம் பற்றி யோசிக்கிறாள்.பிறகு ஞானோதயம் வந்து, வயது வித்தியாசம் திருமணத்திற்குச் சரி வராது, பிரிவோம் என்று பிரிந்தும் விடுகிறாள். சமூகத்தின் பார்வையைச் சகிக்கமுடியுமா என்று பயந்தே அம்முடிவுக்கு வருகிறாள். ஹரி மட்டும் விடாமல் வருடக்கணக்கில் முகவரி, தொலைபேசியுடன் புத்தாண்டு வாழ்த்தட்டைகளை அனுப்புகிறான். அவனையே நினைத்துக் கொண்டிருந்தாலும், தொடர்புகொள்வதில்லை. பெங்களூருக்குக் கிளம்பும் முன் முகவரி தொலைபேசி எண்ணை மட்டும் எதற்கும் இருக்கட்டும் என்று குறித்துவைத்துக் கொள்கிறாள்.

அப்பாவைப் பறிகொடுத்ததையும், சரசா மாமியின் கணவர் இறந்ததையும் நினைத்துக்கொள்ளும்போது மரணம் குறித்த அலசல் அகிலாவினுள் நிகழ்கிறது. மிகவும் இயல்பாக எந்த ஒரு சாமான்யருக்கும் தோன்றும் விதமாயுள்ளது. மரணத்தின் காரணம் தான் என்ன?, அதன் பின்புலம் என்ன?, அதன் பின்விளைவுகள் என்ன? அம்போவென்று குடும்பத்தை விட்டுவிட்டு விடுதலை பெறுவதுதான் மரணமா? அதுதான் அதன் நோக்கமா? என்றும் பலவாறாகச் சிந்திக்கறாள் அகிலா. மாற்றங்களை ஏற்கமறுக்கும் மனித மனம் பற்றியும் அகிலா சிந்திக்கும்போது தோன்றும்.

அம்மா இறந்ததும் தம்பியோடு திருச்சியிலா இல்லை தங்கையோடு பெங்களூரிலா என்று தன் வாழ்க்கையைத் தொடர குழம்புகிறாள். அம்மாவின் மரணம் அவளின் வாழ்க்கையின் போக்கையே மாற்றி அவளை அம்பத்தூரிலிருந்து பெங்களூருக்குத் துரத்துகிறது.

ஒன்பது மாதங்களுக்கு தங்கை பத்மாவின் குடும்பத்தோடு வாழ்ந்த பிறகு தனக்கென்று குவார்ட்டர்ஸ் அல்லாட் ஆனதும், அங்கே குடி போக நினைக்கிறாள் அகிலா. பத்மா ஊர் ஊராய் சுற்றவேண்டிய தன் கணவனின் வேலையைக் காரணம் காட்டி கூடவே குடும்பத்தோடு ஒட்டிக்கொள்கிறாள். அப்போது அகிலாவிற்கு தான் தனியாக வாழநினைப்பதைச் சொல்ல முடியவில்லை. ஆனால், பத்மா அகிலாவின் நலனுக்காகத்தான் அவர்கள் அவளோடு வசிப்பதாய் சொல்லிக்கொண்டு திரிகிறாள். பல இடையூறுகளிடையே அகிலா சகித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், பத்மா தான்தான் அவளைச் சகித்துக் கொள்வாய்ச் சொல்லிக்கொள்கிறாள்.

சந்திராவின் மகள், நாராயணனின் அக்கா, ப்ரியாவின் பெரியம்மா, மூர்த்தியின் மச்சினி என்று மற்றவர் சார்ந்தே இருந்துவரும் தன் முகவரியில் அகிலா சலிப்பு கொள்கிறாள். தன்னை யாரேனும் தனி மனுஷியாக, முழுமனுஷியாகப் பார்க்கமாட்டார்களா என்று ஏங்குகிறாள்.

ஒரு நாள் ஷாப்பிங்க் செய்யும்போது தன் பால்ய சிநேகிதி கற்பகத்தைச் சந்திக்கிறாள். அவள் கணவனை இழந்தபின்னும் பூவும் பொட்டுமாய் இருப்பதைப் பார்க்கிறாள். கற்பகம் தான், அகிலாவைத் தனியே வசிக்கச் சொல்லித் தூண்டுகிறாள். 'மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்' என்று கவலைப்படுவதை நிறுத்து என்கிறாள். " Happiness is choosing one's own life: to live it the way one wants. Happiness is knowing one is loved and having someone to love. Happiness is being able to hope for tomorrow," என்று அகிலாவின் மனதில் பதியும்படி சொல்கிறாள்.

வீட்டில் இந்தப் பேச்சை எடுக்கும்போது தான் புது வீடு வாங்க நினைப்பதாய்ச் சொல்கிறாள் அகிலா. பத்மா மீண்டும் அகிலாவோடு ஒட்டிக்கொள்ள தன் கணவனின் குறைந்த வருமானம் மற்றும் இரண்டு மகள்களின் திருமணம் என்றெல்லாம் காரணங்கள் சொல்கிறாள். பத்மாவின் சுயநலம் அகிலாவுக்கு மிகுந்த எரிச்சலைக் கொடுக்கிறது. ஆனால், அகிலா இம்முறை மிகவும் உறுதியாக இருக்கிறாள். தம்பி நரஸிம்மன் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றும் தன் மாமனார் வீட்டில் என்ன நினைப்பார்கள் என்றும் கேட்கிறான். பத்மா அகிலாவுக்கு யாரோடோ தொடர்பு என்று கூறி அக்காவிடம் அறை வாங்குகிறாள். பத்மாவின் மௌன யுத்தம் தொடங்கிவிடுகிறது வீட்டில். நாராயணன் மட்டும் அக்கறையும் பயமும் கலந்து பேசுகிறான். சிலரிடம் தனியே வசிப்பதைப்பேசி முடிவெடுக்கச் சொல்கிறான். அகிலாவும் அவனது யோசனையை ஏற்கிறாள்.

அப்போதுதான் அகிலாவின் தேடல் தொடங்குகிறது.

சக பயணிகள் ஒவ்வொருவராய் விடைபெற்று கோழிக்கோடு, கோவை, நாகர்கோவில் என்று இறங்கிவிட, ஒவ்வொருவரின் கதையையும் கேட்டபின் பயணத்தின் முடிவில் உள்ளே தான் தளர்ந்த மாதிரியும், தனக்கென்று வாழவேண்டும் என்ற எண்ணம் தன்னுள் வளர்வதை உணர்கிறாள் அகிலா.

கதையின் முடிவு ஒன்றும் பிரமாதமான எதிர்பாராத திருப்பம் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. இருப்பினும், அகிலாவின் தேடல் பயணம் இருக்கிறதே அதுவே சுகமான அனுபவம். நாமும் எதையாவது, குறிப்பிட்டு எதுவுமில்லாவிட்டாலும் பலவித அனுபவங்களையாவது தேடிக்கிளம்பிவிடுவோமா என்றே படிக்கும் நம்மை நினைக்கவைக்கிறது.

சிறுவயதில் அகிலா குடும்பத்தோடு ராமேஸ்வரம் பிக்னிக் போகும்போது மைசூர் பாக், தேங்காய் சாதம், புளியஞ்சாதம், சீடை, முறுக்கு மட்டுமில்லாமல் பச்சைமிளகாய், மாதுளம்பழம் மற்றும் பச்சைக்கொத்துமல்லி போட்ட தயிர் சாதம் என்று நினைவு கூறும் இடங்களில் கூட பேசாமல் தமிழிலேயே எழுதியிருக்கலாமென்றும் தோன்றவேயில்லை தெரியுமா. மொழி அத்தனை அழகாகவும் இயல்பாகவும் பொருந்தியிருக்கிறது. அவ்வகையில் ஆர்.கே.நாராயணனின் ஆங்கிலம் தான் என் நினைவுக்கு வந்தது.

வாழ்வோடு இணைந்த 'ஹிந்து' நாளிதழ், Wordsworth இன் daffodils பூக்களை இகழ்ந்து தமிழ் மக்களின் மல்லிகைப்பூவைப் புகழ்ந்து பேசுவதோடு தினமும் பேருந்தில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளைப் படித்து, மனனம் செய்து வந்து, வகுப்பில் அகிலாவைச் சொல்லச் சொல்லும் தமிழாசிரியர், கோலம் வரைவதில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் அதன் கலாசாரப்பின்னணி, ஜவ்வரிசி வடாம் போடும் சரசா மாமி, எம் ஜீ ஆரின் மரணம் மற்றும் அதன் பின்விளைவாய் ஏற்படும் கலவரம்/குழப்பம் போக்குவரத்து நிறுத்தம், அகிலாவீட்டு ஊஞ்சல், மதுரை சுங்குடி சாரி, ஞாயிறுகளில் அப்பாவிற்காக அம்மா செய்யும் கத்தரிக்காய் பஜ்ஜி, அம்மா கட்டிக்கொள்ளும் மடிசார்,மற்றும் பலவிதமான பிராமணக் குடும்பத்திற்கே உரிய வழக்கங்கள் என்று ஆங்காங்கே விரியும் ஏராளமான நுணுக்கங்கள் போதாதா இது எளிய ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அப்பட்டமான தமிழ் நாவல் என்று உணர. ஆனாலும், துளியும் நெருடவேயில்லை.

படித்து முடித்ததும் இந்நாவலுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைத்தமாதிரித் தெரியவில்லையே என்ற ஆதங்கம் என்னுள் கவிந்தது.

'Ladies Coupe' by Anita Nair -First published by Penguin Books India 2001

வாசகியாக - ஜெயந்தி சங்கர்

நன்றி: திசைகள் மார்ச் 2005

Monday, March 07, 2005

கல்கி தீபாவளி மலர் 2004



ஒரு பக்கத்தையும் தாவிக்குதிக்காமல் வரிசையாகவே படித்து வந்தேன். நான் படித்த அதே வரிசையில் எல்லாப் படைப்புகளையும் பற்றி சின்னச்சின்ன அறிமுகமாகயிருக்கும் இந்தக்கட்டுரை. ஆனந்தவிகடன் மலரைவிடப் பெரியது. ஒப்புநோக்க நீளத்தில் கல்கி ஒண்ணேகால் பங்கு இருக்கும். அகலத்திலும் அதேபோல ஒண்ணேகால் பங்கு. அதன் அளவிற்கு இதில் ஈர்க்கக்கூடிய வர்த்தக அம்சங்களும் இல்லை. கொஞ்சம் குறைவே. தாளின் தரம் பளபளப்போ வழவழப்போ இல்லாத சாதாரண தரமான தாள். ஏறக்குறைய அதே விலையில் அதே எண்ணிக்கையில் பக்கங்கள்.

அட்டையில் நான்கு ஓரங்களிலும் கடுகளவும் இடைவெளி விடாத முழுப் பரப்பளவிலும் 'வேதா'வின் அற்புத ஓவியம். தனது டிரேட் மார்க் மாலை, இடதுகொண்டை அணிந்துள்ள ஆண்டாள் வலக்கையில் வெண்சங்கும் இடக்கையில் பச்சைக்கிளியும் ஏந்திக்கொண்டு, இடதுபுறம் தலையை சற்றே ஒடித்து குழலூதும் கண்ணனை ஒயிலாகப் பார்ப்பது போல. மிக நளினமான, அதிகம் மஞ்சளும் பச்சையும் சேர்த்த வண்ண ஓவியம். ஆண்டாளின் ஒருகாதில் சங்கு மற்றொரு காதில் சக்கரம் ! இந்த ஓவியத்தின் பின்னணியில் துளசிமாடம், முழுநிலா, கோவில், கோபுரம் என்று சிலவும் இருக்கின்றன. பளிச்சென்ற அட்டைப் படமே மனதில் பச்சக்கென்று பதிந்துவிடுகிறது.

முதல் எட்டு பக்கங்களுக்கு விளம்பரங்கள் இருக்கின்றன. தொடர்ந்து இரண்டு பக்கங்களுக்குப் பொருளடக்கம் வருகிறது. அதைத் தொடர்ந்தும் ஐந்து பக்கங்களுக்கு விளம்பரங்கள் தான். முதலில் காஞ்சி மாஹாப்பெரியவரின் படம். சாம்பல் மற்றும் பழுப்பு வண்ணக்கலவையில் அமைந்த ஒரு நிழற்படம். அந்தக் கண்களின் தீட்சண்யம் வழக்கம்போல என்னை என்னவோ செய்தது. ஜெயேந்திரரின் 'விவேக ஒளி பரவட்டும்' ஒரே பக்கம். இது வழக்கமாகச் சொல்லும் தீபாவளிச் செய்தி வகைதான்.

அது முடிந்ததும் அட்டைப் படத்தையட்டிய சுகி சிவம் அவர்களின் 'அதிசய துளசி' கட்டுரை நான்கு பக்கங்களுக்கு. இங்கும் கருப்பு வெள்ளையில் 'வேதா'வின் ஆண்டாளின் வேறு ஓர் ஓவியம் வலப்பக்கத்தை அலங்கரிக்கிறது. ஆண்டாளின் வரலாறு மற்றும் இலக்கியத்தைத் தொட்டு, துளசியின் பெருமைகளைச்சொல்லி விட்டு, ஆண்டாள் இறைவனை அடைய காமயோகத்தைத் தேர்ந்தெடுத்து வெற்றியும் கண்டது அவளின் சாதனை என்கிறார் கட்டுரையாசிரியர் முத்தாயிப்பாக.

ஜி.ஏ. பிரபாவின் 'சிலபார்வைகள் சில மௌனங்கள்' என்ற கதை (கட்டுரை?!) இரண்டு பக்கங்களுக்குப் போகிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை என்றுணர்த்தும் ஒரு படைப்பு. கொஞ்சம் மிகைபடச் சொல்லியிருப்பதுபோல எனக்குத் தோன்றியது. தொடர்ந்து நான்கு பக்கங்களுக்கு 'கம்யூனிசம் நிலைப்பது ஏன்?' என்ற என். சங்கரய்யாவின் கட்டுரை. இதில் எனக்குப் புரியாதவை நிறையவே இருந்தது.

சுவாமி ரங்கநாதானந்தர் அவர்களின் 'இல்லறத்தில் ஆன்மீகம்' சன்யாசத்தைவிட இல்லறம் எப்படி உயர்வானது என்றுரைக்கிறது. மனு ஸ்ம்ருதியில் 'ஒரு கிருஹஸ்தன் தன்னுடைய தலைமுடி நரைத்ததையும், பேரன், பேத்தி முகத்தையும் பார்த்தால் காட்டுக்குப்போய் விடவேண்டும்' என்று சொல்லியிருக்கிறதாம். இப்போதெல்லம் தலைமுடி சீக்கிரமே நரைத்துவிடுகிறது. ஆனால், பேரன் பேத்தியெடுப்பதோ லேட்டாகிறதே, என்றெல்லாம் படிக்கும்போது எனக்குத் தோன்றியது. தற்காலத்திற்கேற்றவாறு வாழும் வீட்டையே தபோவனமாக மாற்றிக்கொண்டு வானப்ரஸ்தம் மேற்கொள்ளலாம் என்கிறார் சுவாமிஜி.

விஜயேந்திரர் ஜெயேந்திரரை வாத்சல்யத்தோடு சிரித்துக்கொண்டே பார்க்கும் ஒரு வண்ண நிழற்படம். இதைத் தொடர்ந்து வந்த மூன்று பக்கக் கட்டுரையான 'மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி' என்ற டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் அவர்களின் வேளாண்கட்டுரை 'காட்டாமணக்கு காப்பாற்றுமா?' என்ற கேள்வியையு முன்வைத்து விஞ்ஞானப்பூர்வமான அணுகுமுறைகளையும் எடுத்துச் சொல்கிறது. பயனுள்ள கட்டுரைதான். அடுத்து வரும் இரண்டு பக்கங்களில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் அரசியல்தலைவர்கள் கொண்டாடும் 'தீபாவளிகளை' கருப்பு வெள்ளைக் கார்ட்டூன்களாகத் தெளித்துள்ளார்கள். அரசியல்தான்!

இனியன் அவர்களின் மிக எளிமையான கருப்புவெள்ளை ஓவியத்துடன் ஹிந்தியில் 1960ல் கமலேஷ்வர் எழுதிய 'பாழடைந்த பேட்டை' கதை பிரசுரமாகியிருக்கிறது. சௌரி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். கமலேஷ்வரின் கருப்பு வெள்ளை புகைப்படத்துடன் அவரைப்பற்றிய சின்ன அறிமுகம் கதை முடியும் நான்காவது பக்கத்தில் கொடுத்திருக்கிறார்கள். விக்டோரியா மஹாராணியின் காலத்தையும் சுதந்திரம் பெற்ற காலத்தையும் மாற்றிமாற்றித் தொடுகிறது கதை. இந்தப் பக்கங்களில் இரண்டு ஜோக்குகள் மற்றும் கருப்புவெள்ளை புகைப்படங்கள் இருக்கின்றன. தொடர்ந்து வரும் ஒரு பக்கம் முழுக்க இரா.சண்முகசுந்தரம் மற்றும் ஸ்ரீஹரி ஆகியோரின் 'க்ளிக்'குகள்.

இருள் நீக்கியான் என்பவரின் 'முத்தங்கி நாதன் !' என்ற குறுங்கட்டுரையில், வருடத்தில் ஆறரைநாட்கள் மட்டுமே ஸ்ரீரங்கம் அரங்கன் அணியும் முத்தங்கியைப் பற்றிய சிறுவரலாறு மற்றும் அதைச் சுத்தம் செய்யும் பணி பற்றியும் கூறுகிறார். வருடத்திற்கு ஒரே ஒருநாள் காண்பிக்கப்படும் கற்பூரப்படியைக் காணத்தவறியதால் 1706 ஆம் ஆண்டு விஜயரெங்க சொக்க நாயக்க மன்னர் எப்படி ஒரு வருடம் அங்கேயே தங்கி கற்பூரப்படியைக் கண்டுகளித்தார், முத்தங்கியையும் ஊருவாக்கிக் கொடுத்தார் என்பது மிகவும் சுவாரசியம். கருப்புவெள்ளையே ஆனாலும் நிழற்படத்தில் முத்தங்கியின் அழகு ரசிக்கக்கூடியதாக இருக்கிறது.

இரண்டு பக்கங்களுக்கு நீளும் கட்டுரையான 'நவக்கிரஹங்கள் அங்கும் இங்கும்', பௌத்தத்தில் இருக்கும் நவக்கிரஹ மூர்த்திகளின் தோற்றங்களையும் நமது ஹிந்துமத நவக்கிரஹங்களின் தோற்றங்களையும் ஒப்பிட்டு ஒற்றுமை, வேற்றுமைகளை அலசுகிறது. ஹிந்துமத நவக்கிரஹங்கள் கருப்புவெள்ளையிலும் பௌத்தமத நவக்கிரஹங்கள் பலவண்ணங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

திருப்புள்ள பூதக்குடி என்னும் புண்ணியத் தலத்தைப்பற்றிய வரலாறை, 'விமானம்' என்னும் தலைப்பில் விஷ்வக்ஸேனன் என்பவர் எழுதியிருக்கிறார். மூலவரின் கருப்புவெள்ளைப் புகைப்படம் ஒன்று கொடுத்திருக்கிறார்கள். இங்கு ராமன் சங்கு சக்கரத்தோடு வில்லும் ஏந்தி லக்ஷ்மியுடன் நிற்கிறான். ஏன்? அதுதான் கதையே. ஜடாயுவுக்கு அந்திமக்கிரியைகள் செய்யவேண்டும் என்று நினைக்கும் இராமன், உடன் சீதா இல்லாமல் எப்படிச்செய்வது என்று நினைத்து, மஹாவிஷ்ணுவாக மாறி லக்ஷ்மியோடு காரியங்களைச் செய்து முடிக்கிறானாம். இதற்கு எளிமையான வண்ண ஓவியம்.

அமரர் கல்கி அவர்களின் 'டாகூர் தரிசனம்' நகைச்சுவையான ஒன்பதுபக்கத்துக்கு நீளும் நீண்ட கட்டுரை. ஷாந்திநிகேதனின் ஆரம்பகாலம், வளர்ச்சி, அதில் ராஜாஜி அவர்களின் பங்கு போன்றவற்றைச் சொல்லிவிட்டு 1940 களின் பிற்பகுதியில் நடந்த முக்கியமான ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறார். அப்போதுதான் கல்கி, ராஜாஜியவர்களின் பரிந்துரையின்பேரில் சுமார் ஆயிரம் தமிழ்ப் புத்தகங்களை ரசிகமணியவர்களுடன் சேர்ந்து ஷாந்திநிகேதனுக்குக் கொண்டுபோய் கொடுத்துள்ளார். 1947 ல் இந்தக்கட்டுரை பொங்கல் மலர் கல்கியில் பிரசுரமாகியிருக்கிறது. பல சின்னச்சின்ன சுவையான தகவல்கள், சம்பவங்கள் என்று தனக்கே உரிய நடையில் சொல்லியிருக்கிறார் கல்கி. அடுத்து இரண்டு பக்கங்களுக்கு பாரிஸ் நகரின் வண்ணப்புகைப்படங்களும் தொடர்ந்து இரண்டு பக்கங்களுக்கு இன்றைய ஷாந்திநிகேதன் வளாகத்தின் புகைப்படங்களும்.

கருப்பு வெள்ளையில் கார்ட்டூன் போன்ற படத்துடன் பிரசுரிக் கப்பட்டுள்ளது ஆரண் யுவராஜ் 'எலியால் வந்த கிலி' என்கிற நகைச்சுவைக் கதை. இந்த இரண்டு பக்கக் கதை பரவாயில்லை, கொஞ்சம் சிரிக்க வைக்கிறது. 'உயிர் எடுக்க உரிமை உண்டா?' என்ற சட்டம் தொடர்பான பி.ஹெச்.பாண்டியனின் 4 பக்கக்கட்டுரை அறியாதபல தகவல்களைத் தருகிறது. ஆம்! தனஞ்செய் சட்டர்ஜியின் தூக்குதண்டனையுடன் தான் தொடங்குகிறது கட்டுரை.

தொடர்புடைய வண்ண ஓவியங்களை நான்குபக்கங்களுக்குக் கொண்டுள்ளது சுதா சேஷய்யன் எழுதிய 'அநுபூதி ஆனந்தம்' எனும் 4 பக்கக்கட்டுரை. சம்பவங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் மிக அழகு. திருவண்ணாமலையில் ஆட்சி செய்த பிரபுதேவராயன் அருணகிரிநாதரின் மீது பொறாமைகொண்டு அவரை வாதுக்கு அழைத்த சம்பவம், அருணகிரிநாதரின் சந்தச் சிறப்பு, அவரின் கந்தரநுபூதியின் மேன்மை என்று படித்துப் பாதுகாக்கவேண்டிய அருமையான கட்டுரை.

'கீழாநெல்லிக்கு மேலான காப்புரிமை' யினை வலியுறுத்தி, செய்யாவிட்டால் நாட்டுக்கு எந்தவிதத்தில் நட்டம் என்பதுபோன்ற பல பயனுள்ள தகவல்கள் அடங்கிய கட்டுரையினை பேராசிரியர் எஸ்.பி.தியாகராஜன் (சென்னைப் பல்கலைத் துணைவேந்தர்) எழுதியுள்ளார். முகில் 'மரப்பாச்சி' என்ற கவிதை எழுதியுள்ளார்.

அடுத்த ஒருபக்கக்கட்டுரை ந.ச.நடராசன் எழுதிய 'அன்னமய்யா'. இதில் 1408 ஆம் வருடம் பிறந்த ஸ்ரீ அன்னமாச்சாரியாரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. கர்நாடகசங்கீதப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு ஸ்ரீ அன்னமாச்சாரியாரைப் பற்றித் தெரிந்திருக்கும். இவரின் மனைவி திம்மக்க அம்மையாரும் சுபத்ரா கல்யாணம் எனும் காவியத்தை எழுதிய தெலுங்கின் முதல் பெண் கவிஞர் என்ற சிறப்புத்தகவல் எனக்குப் புதியது.

விஷ்வக் எழுதிய 'நகரத்தார் நாகரிகம்' ஒருபக்கக் குறுங்கட்டுரை. ஆனால், நான்கு பக்கங்களுக்கு அவர்களின் கலாசார சமூக வாழ்வின் பிரதிபலிப்பாய் அழகிய வண்ணப்புகைப்படங்கள் பளிச்பளிசென்று கொடுக்கப்படிருக்கின்றன. ஜே.எஸ் ராகவனின் 'ஹெல்ப் ஆண்டி' இரண்டு பக்கங்களுக்கு நகைச்சுவை என்ற பெயரில் கேள்வி பதில் பாணியில் கொடுக்கப்பட்டிருக்கும் எட்டு கேள்விகளும் அதற்கு பதில்களும்.

ஹரி பக்தியைச் சிலாகிக்கும் பண்டரிபுரம் பற்றி 'பண்டரிபுரம் ஆகும் கோவிந்தபுரம்' என்ற சுப்ர.பாலன் அவர்களின் கட்டுரை ஸ்ரீஹரியில் காமராவில் பிறந்த புகைப்படங்களுடன் மெச்சும்படி இருக்கிறது. பாண்டுரங்கனைப்பாடும் பஜனைப்பாடல்களையும் 'அபங்க்' என்றறியப்படும் கீதங்களையும் பற்றிப் பிரஸ்தாபிக்கிறது இந்த மூன்று பக்கக்கட்டுரை. 'அபங்க்' என்று படித்ததுமே பாடகி அருணா சாய்ராம் தான் என் நினைவுக்கு வந்தார்!

'அள்ளி அள்ளிப் பருக ஒரு கொல்லி' என்ற அடுத்த கட்டுரை கொல்லிமலையின் சிறப்பை நிறைய கருப்புவெள்ளை நிழற்படங்களின் உதவியோடு மூன்று பக்கங்களில் சொல்கிறது. சித்தர்கள், காளி வனம், கலப்படமிளகு, செம்மேடு என்று பலவறைச் சொல்லி பழமையையும் புதுமையையும்கூடச் சொல்கிறது. ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசுவின் உபயம் இந்தக் கட்டுரை.

அடுத்ததுதான் 'மகளிரும் சிறுவரும்' என்ற பா.ராகவனின் நான்கு பக்கக்கதை. கருப்பு வெள்ளையில் வேதாவின் அழகிய பொருத்தமான ஓவியம். முதியவர் ஒருவர் கண்சரியாகத் தெரியாததால் தவறுதலாக லேடீஸ் ஸ்பெஷல் பஸ்ஸில் ஏறிவிட்டுப் பிறகு படும் சில அனுபவங்கள், அவரின் சிந்தனை ஒட்டங்கள் என்று மிகக் கச்சிதமான கதை. இவரின் ஆனந்த விகடன் தீபாவளி மலர் கதையைவிட இந்தக் கதையே எனக்குப் பிடித்தது.

http://groups.yahoo.com/group/Maraththadi/message/8238

ஸ்ரீ ஹரி எடுத்துள்ள 2 குழந்தைகளின் கருப்பு வெள்ளைப் போட்டோக்கள் கடைசிப் பக்கத்தில் பாதிக்குமேல் அடைத்துக்கொண்டிருக்கின்றன.

'வினாடிகளும் வாழ்வும்' என்ற தமிழவன் அவர்களின் கவிதை. பாடுபொருள் 'வாழ்க்கை' என்றபோதிலும் 'குடை'யைச் சுற்றியே சொல்ல ஆரம்பித்து பாதிக்குமேல் காற்று, நதி என்று தொட்டு இறுதியில் நேரடியாகவே உணர்வுகளைச் சொல்லி முடிக்கும் அவரது பாணி எனக்குப் பிடித்திருந்தது.

பேராசிரியர் அ.சினிவாச ராகவன் அவர்களின் நூற்றாண்டு அக்டோபர் 23, 2004 அன்று தொடங்கியுள்ளதாம். இதையட்டி அ.சீ.ராவின் 'வீடும் வெளியும்' பிரசுரித்துள்ளார்கள். பழைய சிதிலமடைந்த வீட்டைப் பற்றிச் சொல்லிவிட்டு கற்பனைச் சிறகை விரித்து பாரதியையும், அவது 'எந்தையும் தாயும்' வரிகளை உயர்த்தி, தேசபக்தியைச் சொல்லும் அவனது பாடல்களையும் பாராட்டிச் சிலிர்த்து, மயானம் வரை போகிறார் அ.சீ.ரா. ஆஹா! எத்தனை அழகான நடை! கடைசி வரியைப் பாருங்களேன். << வீடு கவிஞனுடைய கற்பனையின் மூலம் வெளியாகிவிடுகிறது. இல்லை. வெளி முழுதும் வீடாகவே நம்முடைய வாழ்க்கையின் உயிர்தத்துவமாக மாறிவிடுகிறது>> வீட்டைப் பற்றி உணர்வுப்பூர்வமாக எழுதியுள்ளவற்றைப் படிக்கும்போது நமது ஹரியண்ணா அவர்களின் 'தம்மக்கள்' கட்டுரையில் வருமே வீடு, அது சொல்லும் கவித்துவம் நிறைந்த செய்தி, அதுதான் நினைவுக்கு வந்தது எனக்கு!

http://www.maraththadi.com/article.asp?id=605

அடுத்தது சில 'கோகுலம் பக்கங்கள்'. சுட்டிகளின் வண்ணப்புகைப்படங்களோடு அவர்களின் தீபாவளிப் பெருமைகள் ! மேலும் இரண்டு பக்கங்களுக்கு எஸ்.சுஜாதாவின் 'அண்டை நாட்டுப் பண்டிகைகள்'. தொடர்ந்து பா. முருகேசனின் 'சிதறி விழுந்த நட்சத்திரங்கள்'

அருண் சரண்யாவின் 'துப்பாக்கி சொல்லாத கதை' யில் கதாநாயகனின் அக்கா தம்பிமேல் அதீத பாசம் வைத்ததால், பொஸசிவ்நெஸ் காரணமாக அவனது காதலியையே கொல்ல முயற்சிக்கிறாள். மர்மக் கதையாக்கம் நல்ல முயற்சி. அடுத்தது. ஜெ. பாக்யலக்ஷ்மியின் 'கலைக்க முடியாத வேஷம்'. பரம்பரையாக தர்மம் செய்தே பழகிய பணக்காரன் நொடிந்துபோய் பிச்சையெடுத்தாலும்கூட வேறொருவனுக்குப் பிச்சைபோடவே நினைப்பான் என்கிறது கதை. பரவாயில்லை.

சௌந்தரா கைலாசம் அவர்களின் 'துருவாசர்' மரபுவகையில் எழுதிய கவிதை. அடுத்தது ஆர். சூடாமணியின் 'தண்ணீர் குடம்'. தண்ணீர் பிடிக்கும் இடத்தின் சச்சரவுகள், வம்புகள் போன்றவற்றை இயல்பாகச்சொல்லும் நல்ல கதை. பெற்றபிள்ளைகள் வெளிநாடுகளில் வாழ முதிய தம்பதியர் எப்படி உள்ளூரில் இருக்கும் எளியோரிடம் அன்பாகப்பழகி அவர்களைத் தங்கள் உற்றாராய்ப் பாவிக்கிறார்கள் என்பதே மையக்கருத்து. அவர் டாக்டர். சிகிச்சைக்கு வரும் ஒரு பெண்ணுக்கு இலவசமாக மருந்துகொடுத்து உதவுகிறார். அவளோ தண்ணீர் பிடிக்க அந்த முதிய தம்பதிக்கு உதவுகிறாள்.

அடுத்துவரும் பக்கங்கள் கவிதை மடல் பகுதி. 'கண்ணசைவில்' என்னும் ச.சவகர்லால் அவர்களின் கவிதை மாருதியின் வண்ண ஓவியத்தோடு துல்லியமாகச் ஸ்ருதி சேர்த்துள்ளது. 'வன்முறை' என்ற மருதனின் கவிதை எனக்குப்பிடித்தது. ஏனென்று தான் சொல்லத் தெரியவில்லை. அதனைத் தொடர்ந்து 'வாசிப்பு' என்ற மு. முருகேஷின் கவிதை. கடைசியில் 'நிழல்' என்ற பூவை அமுதனின் கவிதை. ஆனந்தியின் 'ஞான சரஸ்வதி' மூன்று பக்கங்களுக்கு விரியும் கலைவாணியின் மேன்மைகளை எடுத்தியம்பும் நல்ல கட்டுரை.

அடுத்து, ஜெயந்தி சங்கரின் : ) 'நாலேகால் டாலர்' கதை வண்ணப்பக்கங்களில், ஜெயராஜின் வண்ண ஓவியத்துடன் 4 பக்கங்களில் பிரசுரமாகியுள்ளது.

கல்கி இதழாசிரியர் சீதா ரவி அவர்களின் 'ஷ்யாம கிருஷ்ணன்' என்று ஒரு கதை. கோபுலுவின் வண்ண ஓவியங்கள் கதைக்கு நல்ல பக்கவாத்தியம் ! பாடகர் ஒருவர், நினைத்தால் திருவையாற்றுக்குக் கிளம்பிச் சென்று விட்டுத் தாமதமாக வீடு திரும்புவார். இவரின் பழக்கம் அவரது மனைவி லலிதாவுக்குப் புதிதல்ல. பசியோடு காத்திருந்து பழக்கம். பக்கத்து வீட்டு தர்மா வந்து அவளின் வாயைப் கிளறி, 'தனிமை' உன்னை வாட்டவில்லையா என்று கேட்டு அவளைப் பேசவைக்கிறாள். அதற்கு லலிதா கூறும் விளக்கமும் பதிலுமே கதையின் ஜீவன். கதை என்று பெரிதாக இல்லாவிட்டாலும் விவரிப்புகள், கதையின் மொத்த உருவம், செய்தியின் உண்மை ஆகியவை எனக்குமிகவும் பிடித்தது.

அடுத்தது 'பார்க்கும் மரங்களெல்லாம்' என்ற மதிவண்ணனின் கவிதை. அடுத்தது சுபா எழுதியது. இது கதையல்ல, கட்டுரை. 'சொல்லச்சொல்ல இனிக்குதடா' என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் பற்றியும், அவரது மார்க்கம் அவர்களிருவருக்கும் கொடுத்த அனுபவம் பற்றியும் கூறி, தியான லிங்கம், தியான வகுப்புகள், அவற்றினால் பெறக்கூடிய பலன்கள் என்று நிறைய எழுதியிருக்கிறார்கள்.

'மங்கைய மலர்' பக்கங்களில் முதலில் ரேவதி சங்கரன், 'ஆசை ஆசையா', ஓமலேகியம், சுக்கு லேகியம், இங்கி லேகியம் போன்றவற்றைச் செய்யக் கற்றுக்கொடுக்கிறார். அடுத்த இரண்டு பக்கங்களுக்கு பாரதி பாஸ்கர் எழுதிய நகைச்சுவைக் கட்டுரை 'குகையும் மலையும்'. இதில் பெண்கள் அடங்கிய பட்டிமன்ற கோஷ்டி ஒன்று மலேசியாவிற்குப் பயணப்படுகிறது. பத்துமலைக்குச் செல்லும் இவர்களிடையே இந்தியாவிலிருந்து கிளம்பியது முதல் திரும்புவது வரை நடக்கும் தமாஷான உரையாடல்கள், ஏற்பாட்டாளர் பழனிச்சாமி படும்பாடு என்று கொஞ்சம் சிரிக்கவைக்கிறது. பொருத்தமான கார்ட்டூன் சித்திரங்கள் ரசிக்கும்படியுள்ளன.

'சுமை' என்ற சாயா எழுதிய கவிதை சும்மாடு கட்டாமல் சுமைதூக்கிப் போகிறவளைப் பார்த்து கேள்வியுடன் ஆரம்பிக்கிறது. கவிதை நன்று. அடுத்த இரண்டு பக்கங்களுக்கு சைனீஸ் பிரஷ் பெயிண்டிங்க் பற்றி லக்ஷ்மி ராமநாதன் விளக்குகிறார். சிங்கப்பூர், இந்தோனீசியா போன்ற நாடுகளில் வசித்தபோது கற்றுக்கொண்டாராம். அவரது ஓவியங்கள் பார்ப்பவரையும் கற்றுக்கொள்ளத் தூண்டும்வண்ணம் அழகாக இருக்கின்றன. மாண்புமிகு நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் 'பெண்ணுக்கொரு நீதி' பகுதியில் இரண்டு பக்கங்களுக்கு ஆணாதிக்க நோக்கு, அதனை வளர்க்கும் ஊடகங்கள் போன்ற எல்லாவற்றையும் சாடுகிறார். உண்மையில் அத்தனையும் நியாயமான விவாதங்களே.

'வானவன் மாதே ஈஸ்வரம்' என்ற தேவமணி ர·பேலின் அழகிய புகைப்படங்களுடன் கூடிய கட்டுரை இலங்கையின் வடமத்தியப் பகுதியில் உள்ள ஆலயத்தைப்பற்றிய வரலாறு பேசும் கட்டுரை. சிதிலமடைந்த நந்தி மற்றும் சிங்களக் கல்வெட்டுப் புகைப்படங்கள் குறிப்படவேண்டியவை. இலங்கை சிலகாலம் சோழர்காலத்தில் இருந்ததாம். 'அவதாரம்' என்ற சு. வேணுகோபால் எழுதிய 5 பக்கக்கதை தம்பதியரிடையே இருக்கக்கூடிய 'ஈகோ' எப்படியெல்லாம் கதாநாயகனை ஆட்டிவைக்கிறது என்று சொல்லி அவனின் மனமாற்றத்தையும் சொல்கிறது. நல்லகதைதான். நடுப்பக்கங்களில் நீள்கட்டம் கட்டி சில ஜோக்குகளைக் கொடுத்துள்ளார்கள்.

'கல்கி அவதாரம் எப்போது?' என்ற பழ.பழநியப்பன் அவர்களின் இருபக்கக்கட்டுரையில் பல தெரிந்த தெரியாத தகவல்களைக் கொடுத்து 'இந்த யுகத்திலே பிறக்கப்போகிற பத்தாவது அவதாரம் நாமே! நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளே சேர்ந்துள்ள அரக்கத்தனத்தை எல்லாம் விரட்டிவிட்டு, ஒழித்துக்கட்டிவிட்டு, நம்மைநாமே புதுப்பித்துக் கெள்ளவேண்டும்', என்கிறார். சித்தார்த் எழுதிய 'ஒன்றுக்கும் உதவாதவர்கள்' நகைச்சுவை நாடகம் 4 பக்கங்களுக்கு நீள்கிறது. இது 'மீண்டும்' பாட நினைக்கும் 'பெண்'ணின் கதை. பரவாயில்லை.

ஒருபக்கத்திற்கு காஞ்சிகாமாக்ஷ¢ ( தனுஸ¤) அம்மன் வண்ணப்படம் ! 'ஆயு புவான்' ( ஸ்ரீலங்காவுக்கு வாருங்கள்! ) என்ற சாருகேசியின் கட்டுரை 7 பக்கங்களில் பலபுகைப்படங்களுடன் சுற்றுலாத்துறையின் மொழியோடு கொஞ்சம் வாரலாற்று மொழியும் கலந்து கொடுக்கிறது. பயனுள்ள கட்டுரை. தொடர்ந்து 4 பக்கங்களுக்கு ஸ்ரீலங்காவின் வண்ணவண்ணப் புகைப்படங்கள் !

என்.சொக்கன் எழுதிய 'பொதி' மாருதியின் கருப்புவெள்ளை ஓவியத்துடன் 5 பக்கங்களுக்குப் போகிறது. சின்னப் பெண்குழந்தை எப்படித்தன் அம்மாவின் ஆங்கில மோகம் மற்றும் தேவைக்கதிகமான புறப்பாட நடவடிக்கைகளின் பளுகாரணமாகத் தன் இயல்பான சின்னச்சின்ன ஆசைகளையும் கனவுகளாகவே வைத்துக்கொள்ள நேர்கிறது என்பதுதான் கதை.

'ஓவிய மூவர்' ஸ்ரீனிவாசன், பாலசுப்ரமணியன், நாகேந்திரபாபு ஆகியோரது வாழ்க்கை, ஓவியப்பாணி என்று சொல்லிவிட்டு அடுத்த 2 பக்கங்களுக்கு அவர்களது வண்ண ஓவியங்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஓவியங்கள் தான் எத்தனை நேர்த்தி ! 'கோவில் மணி சொன்ன செய்தி'யில் கலைத் தம்பதியர் தாஸ், உஷாவைப் பற்றியது. கணவர் சிற்பி. மனைவி ஓவியர். பொதுவான இவர்களது படைப்புகளின் அம்சம் பிள்ளையார். இரண்டு பக்கங்களுக்கு இவர்களின் அற்புதக் கைவண்ணம்!

திருப்பூர் கிருஷ்ணன் 'கண்ணன் வந்தான்' என்ற தலைப்பில் நீண்ட கவிதை எழுதியுள்ளார். அடுத்து ரம்யா நாகேஸ்வரனின் 'ஒரு துண்டு சாக்லேட்' இருபக்கங்களில் 'டையடிங்க்' இருக்கும் ஒரு பெண்ணின் மனவோட்டங்களைச் சொல்லியிருக்கும் நகைச்சுவைக் கதை. 'திருபுடை மருதூர் அற்புதங்கள்' கட்டுரை, சிற்பங்களின் மிக அழகிய நிழற்படங்களுடன் ஸ்தலவரலாறு சொல்லிவிட்டுச் சிற்பங்களைப்பற்றியும், மூர்த்திகளைப்பற்றியும் சொல்கிறது. திருநெல்வேலியிலிருந்து பக்கமாம் இந்தத்தலம். மு.மாறனின் 'ஜானி' என்ற நாயைப்பற்றிய கதை ஏற்கனவே படித்த சில கதைகளை நினைவூட்டியது.

'நீச்சல் தெரியாத நீச்சல் சாம்பியன்' கௌதம் ராம் எடுத்த நேர்காணல். எண்பத்தைந்து வயதாகும் கோமதி சுவாமிநாதன் அவர்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் அவரது நினைவலைகளைத் தொகுத்துள்ளார்கள். நகைச்சுவையாகப் பத்திரிக்கைகளில் எழுத ஆர்வங்கொண்டு இவர் தனது மூன்றாம் படிவ ஆசிரியர் ஒருவரையே பல ஆண்டுகள் கழித்து ஒரு பாத்திரமாக்கி நகைச்சுவைக் கதையெழுதி சுதேசமித்ரனுக்கு அனுப்பிவிட்டார். அவரே எதிர்பாராமல் பிரசுரமானது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக மீண்டும் ஒரு நகைச்சுவை நாடகம் ஒன்றை எழுதி அனுப்பினாராம். கதைக்கு ஏழு ரூபாய் சன்மானம் வந்ததாம். இன்னும் சுவையான பல சம்பவங்கள் தகவல்கள் உள்ளன.

'ஒற்றுமைக்கு ஒரு விழா' என்ற மாதா அமிருதானந்தமயி தேவியின் கட்டுரையை ஆ.வை.சி.மூர்த்தி தமிழாக்கியுள்ளார். இதில் மாதாஜி 'மன்னிப்போம், மறப்போம்',என்ற தத்துவத்தின் மூலம் பூலோகத்தையே சொர்க்கமாக்கலாம் என்கிறார்.
வாஸந்தியின் 'வாக்குமூலம்' கண்முன் நடந்த கொலைகளைப்பார்த்த பெண்ணைப்பற்றியது. சட்டத்தைத் தட்டி அடக்கிவிட்டுத் தங்களுக்குச் சாதகமாக வாக்குமூலம் கொடுக்கும்படி சொல்கிறது ரௌடிக்கும்பல். அந்தப்பெண்ணும் உயிருடன் இருக்கும் தம்பி மற்றும் அம்மாவையாவது காப்பாற்றிவிட எண்ணி 'வாக்குமூலம்' கொடுத்துவிடுகிறாள்.

ஆர்.சி.ஜெயந்தன் எழுதியுள்ள 'கமல் எம்புட்டு அழகானவன்' என்ற மூன்று பக்கக்கட்டுரை பல நிழற்படங்களோடு கமல்புகழ் பாடுகின்றது. நிறைய தெரிந்ததெரியாத செய்திகள். அவற்றைத்தொடர்ந்து வரும் 4 பக்கங்களில் களத்தூர் கமலிலிருந்து வசூல்ராஜா, ஏன், நிலுவையிலிருக்கும் சரித்திரக்கமல் வரை முக்கிய பல வண்ணப்புகைப்படங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

யுகபாரதியின் 'ஜாதகக் குறிப்பு' கவிதை நன்றாகவேயிருக்கிறது. த. க நீலகண்டன் 'கடன் தீர்க்கும் கடம்பூர்' கட்டுரையை கருப்புவெள்ளை நிழற்படங்களுடனும் தனுஸ¤வின் அழகிய கருப்புவெள்ளக் கோட்டோவியங்களுடனும் தந்திருக்கிறார். பொன்னியின் செல்வன் வரலாற்றுக் களமாக அமைந்துள்ள தேவாரப் பாடல்பெற்ற ஸ்தலமான கடம்பூர் கரக்கோயில் என்றும் வழங்கப்படுகிறதாம். வரலாறு இந்தக்கட்டுரையில் சுவையுடன் விவரிக்கப்பட்டுள்ளது.

மூன்று வெள்ளிக்கிழமைகளாகப் பிரித்து 'தாஜ் மகால்' கதையை ந.காவியன் எழுதியுள்ளார். ஷாஜஹான் மும்தாஜ் கதைதான் என்றாலும் ரசிக்கும்படி எழுதியுள்ளார் கதாசிரியர். 'அன்பின் ஈரம்' கட்டுரை, ரன் இவன் ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ள புகைப்படக்கலைஞர் சண்முகசுந்தரம் பற்றியது. ஒருபக்கமேயானாலும் புகைப்படங்களோடு சுவாரஸ்யமாயிருக்கிறது. அடுத்துவரும் 4 பக்கங்களிலும் இவரின் கலைக்கண்ணோடு வறுமையைச் சொல்லும் புகைப்படங்கள். கேவாக் கலரில் அழகாக இருக்கின்றன.

'கிளியே கிளியே' பொன்மணி வைரமுத்துவின் கவிதை. மனசாட்சியைத் தான் கிளியாக உருவகப்படுத்தி எழுதியுள்ளார் என்று நான் புரிந்துகொள்கிறேன். நான் தவறாகவும் இருக்கலாம். கவிதை புதுமாதிரி நன்றாகவேயிருக்கிறது. மருதனின் 'லவ்வரை லவ்வுவது எப்படி?' என்று இரண்டு பக்கங்களுக்கு நகைச்சுவை என்ற பெயரில் போட்டிருக்கிறார்கள்.

'திக்கற்ற பார்வதி' என்ற ராஜாஜியின் நெடுங்கதையை 11 பக்கங்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இதில் சிறப்பம்சம் என்றால், லக்ஷ்மி, ஸ்ரீகாந்த் நடித்த 'திக்கற்ற பார்வதி' திரைப்படத்தின் ஸ்டில்களைக் கருப்பு வெள்ளையிலும், கோபுலுவின் பொருத்தமான வண்ண ஓவியங்களையும் மாற்றி மாற்றி ஆங்காங்கே கொடுத்திருப்பதுதான். நான் இன்னும் முழுவதும் படித்து முடிக்காத இந்தக்கதையின் கடைசிப் பக்கத்தில் (இது மலரின் கடைசிப்பக்கமும்கூட) பாதிப்பக்கத்துக்கு பழனி.இளங்கம்பன் அவர்களில் 'எழுதாக்கவிதைகள்' என்னும் கவிதை வெளியாகியுள்ளது. மிக எளிமையான கவிதை. அதிகம் முதிர்ச்சியில்லை.

வெளிநாடுகளில் தீபாவளி மலர்களைப் படிக்கும் வாய்ப்பில்லாதவர்களுக்காக மலர் முழுவதையும் சுருக்கமாகவேயானாலும் எல்லாவற்றையும் சொல்லிவிட எண்ணித் தான் விளம்பரப்பக்கங்கள், ஜோக்ஸ் தவிர மற்றவற்றைத் தொட்டிருக்கிறேன்.

(நிறைவு)

thanks:
marathadi e groups
marathadi.com