Friday, February 25, 2005

ஏழாம் சுவை

தமிழர்களிடையே அறியப்படும் உறைப்பு, துவர்ப்புச் சுவைகளையும் சேர்த்து சுவைகள் ஆறு உண்டு. இனிப்பு, கசப்பு, கரிப்பு, புளிப்பு, காரம் மற்றும் துவர்ப்பு ஆகியவைவையே அவை. அறுசுவை சரி, இதென்ன ஏழாம் சுவை?! ம்,. இருக்கிறதே.

உலகளவில் புளிப்பு, இனிப்பு, உப்பு (கரிப்பு) மற்றும் கசப்பு மட்டும் சுவைகளாகக்கொள்கிறார்கள். அதன்படி இது ஐந்தாவது சுவையாக இருந்தாலும் நமக்கு இது ஏழாம் சுவை தான்.மோனோ சோடியம் க்ளூடமேட் (MSG/Monosodium Glutamate) எனப்படும் MSG.

'அஜினோமோடோ' என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுவே உப்புபோன்ற ஒரு பொருளின் பெயர் என்றே பலரும் நினைக்கின்றனர். அஜினோமோடோ என்பது சும்மா ஒரு ப்ராண்ட் (brand name) தான். உண்மையில் அது மோனோ சோடியம் க்ளூடமேட் (MSG/Monosodium Glutamate) என்னும் பொருள். இதை ஒரு இரசாயனம் என்றே இத்தனை நாட்களாக நினைத்துவந்தேன். ஆனால், இது கரும்பு அல்லது பீட் ரூட் போன்றவற்றிலிருந்து பெறப்படும் சர்க்கரைப்பாகைப் புளிக்க வைத்துத் தயாரிக்கப்படுகிறது. இதை 'பீர்' (beer), வைன்( wine), வினீகர் (vinegar) போன்றவற்றைப் போலவே புளிக்க வைத்துத் (fermentation) தயாரிக்கிறார்கள். உற்பத்தி செய்யப்படும் மோனோசோடியம்க்ளூடமேட் (MSG) வெள்ளை நிறத்தில் சர்க்கரை, உப்பு போன்று இருக்கும். இது நீரில் கரையக்கூடியது. மோனோசோடியம்க்ளூடமேட் 78.1% க்ளூடமேட், 12.3 % சோடியம் மற்றும் 9.6 % நீர் ஆகியவற்றைக் கொண்டது. உணவில் சமைக்கும்போதோ சமைத்தபிறகோ இதனைச் சேர்த்து உணவின் சுவையைக் கூட்டுகிறார்கள். டின்களில் அடைக்கப்பட்ட உணவு, உறைய வைக்கப்பட்ட உணவுகள், திடீர் நூடில்ஸ் போன்றவற்றிலும் உலகெங்கும் உணவகங்களிலும் உபயோகிக்கிறார்கள்.

சிறுவர்களில் பலர் மெக்டோனால், கெண்டகி, பிட்ஸா ஹட், சைனீஸ் போன்ற உணவகங்களின் உணவிற்கு அடிமையாகும் நிலையைப்பார்க்கும்போதெல்லாம் தோன்றும். ஏதோ ஒரு விதத்தில் இவர்களைக் கவரும் பொருள் அதில் சேர்க்கப்படுகிறது என்று. இவ்வகை ·பாஸ்ட் ·புட் வகை உணவுகளிலும் வேறு சில உணவுகளிலும் இந்த மோனோ சோடியம் க்ளூடமேட் (MSG/Monosodium Glutamate) சேர்க்கிறார்கள்.

க்ளூடமேட் இருவகைப்படும். ஒன்று புரதத்துடன் இணைந்துள்ள (bound)க்ளூடமேட் ஒருவகை. இணையாது (free) தனித்திருக்கும் க்ளூடமேட் இரண்டாம் வகை. இதில் இரண்டாவது வகைதான் உணவிற்குச் சுவையைக் கூட்டும். இது காய்கறிகளில் பெரிதும் காணப்படுகிறது.

க்ளூடமேட் இயற்கையாகவே உணவில் இருக்கிறது. இறைச்சி, முட்டை, மீன், காய்கறிகள், பாலாடைக்கட்டி(cheese) போன்றவற்றில் இது இருக்கிறது. மனித உடலில் 1.4 kg தசைகளிலும், மூளை, சிறுநீரகங்கள் போன்ற பிறபாகங்களிலும் பரவலாகக்காணப்படுகிறது. தினமும் சுமார் 41 கிராம் உடலில் உற்பத்தியாகி அது பல்வேறு உடலியக்கங்களுக்குச் செலவிடப்படுகின்றது. இயற்கையாகவே உணவிலிருக்கும் இது தினமும் நம்மால் சராசரி 17கிராம் உட்கொள்ளப் படுகிறது. இதுதவிர உணவில் செயற்கையாகச் சேர்க்கப்படும் MSG சுமார் 0.35- 3 கிராம் வரை சேர்கிறது. தினமும் சுமார் 14 கிராம் க்ளூடமேட் மலம், சிறுநீர், வியர்வை போன்ற உடல் கழிவுகள் வழி வெளியேறுகிறது.

இது சுவைக்கு மட்டுமில்லாமல் வாசனைக்கும் உபயோகிக்கப்படுகிறது. உணவின் முழுச் சுவையையும் வாசனையையும் இது வெளிக்கொணர்வதாக நம்பப்படுகிறது. உணவுண்ணும் சுகத்தைக்கூட்டி பசியைக்கூட்டுவதோடு ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது என்கிறது அஜினோமோடோ நிறுவனம்.

1908 ஆம் ஆண்டு ஜப்பானிய இம்ப்பீரியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ப்ரொ·பெஸர் கிகுனே இகிடா என்பவர் 'கோம்பு' என்ற கடல் களை(sea weed)யிலிருந்து முதல்முதலாக க்ளூடமேட் எனும் பொருளை ஆராய்ந்து அறிந்து வெளியுலகுக்கு எடுத்து அறிமுகப் படுத்தியிருக்கிறார். அன்றிலிருந்து உணவின் சுவை மற்றும் மணம் கூடுவதற்கு இது ஐரோப்பா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் 'சூப்' செய்வதற்குப் பெரும்பாலும் உபயோகிக்கப் பட்டுவருகிறது. உணவகங்களில் இதன் உபயோகம் பற்றிய செய்தி ரகசியமாகவே இருந்து வந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் பிற்பகுதியில் தான் இது பகிரங்கமாக அறியப் பட்டிருக்கிறது. க்ளூடமேட்டை ஜப்பானியர்கள் 'உமாமி' என்றழைக்கிறார்கள்.

ஜப்பானியர்களைப் பொருத்தவரை இனிப்பு, புளிப்பு, கரிப்பு மற்றும் கசப்பைத் தொடர்ந்து 'உமாமி' ஐந்தாவது சுவையாகிறது. இயற்கையன்னை நம் நாக்கின் உணர்வை (taste buds) இவ்வகைச்சுவைகளின் சமச்சீரான கலவையை ருசிக்கும் படியமைத்துள்ளாள். பிட்ஸா மற்றும் பாஸ்தா போன்ற உணவுகளில் பாலாடைக்கட்டி (சீஸ் - cheese ) அதிகம் சேர்க்கப்படுவதும் ·பெரெஞ்ச் ·ப்ரைய்ஸ் (french fries), பர்கர் (burger)போன்றவற்றில் தக்காளிசாறை (tomatoe sauce) ஊற்றிக்கொள்வதும்கூட அந்தச் சமச்சீரான சுவையைக் கொண்டுவரத்தான். எப்படி இனிப்பு கார்போஹைடிரேட்டையும், கசப்பு நச்சுத்தன்மையையும் உப்பு தாதுப்பொருள்களையும் உணவில் நமக்கு உணர்த்துகிறதோ அதேபோல உமாமி அல்லது க்ளூடமேட் 'புரதம்' (protien) உணவில் இருப்பதைக் காட்டுகிறதாம். இதற்குக்காரணம் க்ளூடமேட் உணவிலுள்ள புரதத்திலிருக்கும் அமினோ ஆசிட்டுடன் இணைந்துள்ளது. அமினோ ஆசிட்டினால் ஆனா புரதம் சதைகளுக்கு மிகமுக்கியம்.

தக்காளி, பாலாடைக்கட்டி, 'மஷ்ரூம்' (mushrooms) எனப்படும் காளான் போன்ற பல உணவுப் பொருள்களில் க்ளூடமேட் நிறைந்துள்ளது. பழங்கள் இயற்கையாகப் பழுக்கும்போது அதிலிருக்கும் க்ளூடமேட் கூடுகிறது. அதனால்தான் மரத்திலேயே பழுக்கும் பழங்களுக்கு ருசியதிகம். பசும்பாலைவிட தாய்ப்பாலில் பத்துமடங்கு இயற்கையான க்ளூடமேட் இருக்கிறது.

புளிக்கவைத்த (fermented) மீன் இறைச்சி மற்றும் காய்கள் அதிக சுவையுடையதாய் பல வருடங்களாக நம்பப்பட்டு வருகிறது. ஜப்பானின் 'ஷோட்சுரு'( shottsuru), பர்மாவின் 'ங்கான்- ப்யா -யே'( ngan-pya-ye) , ·பிலிபைன்ஸ் 'படிஸ்'(patis), ரோம் நகரின் 'கரும்'(garum), தாய்லந்தின் 'நம் ப்ளா'(nam pla), வியெட்நாமின் 'nuoc mam tom chat', போவ்ரில், வெஜிமைட், மார்மைட் மற்றும் வோர்செஸ்டர்ஷையர் சாஸ் (sauce) போன்றவை இதற்குச் சிறந்த உதாரணங்கள். இவை தவிர சோயா சாஸ், பட்டாணி, பழுத்த தக்காளி போன்றவற்றிலும் க்ளூடமேட் ஏராளமாய் இருக்கிறது.

ஒரு தேக்கரண்டி (3.8g)MSG யில் 467mg சோடியம் இருக்கிறது. உப்பைக்குறைக்க நினைக்கும் மக்கள் இன்று அதிகரித்து வருகிறார்கள்.மோனோ சோடியம் க்ளூடமேட் (MSG/Monosodium Glutamate) எனப்படும் MSG ஒரு உப்பு இல்லை. ஆனாலும் கூட மோனோசோடியம்க்ளூடமேடை சிறிதளவு உபயோகித்தாலே உணவில் 30-40% உப்பைக் குறைக்க முடியும். ஆனால், 0.1-0.8% தான் உணவில் இது சேர்க்கப்படவேண்டும். அதற்கு மேல் அதிகமானாலும் உணவின் சுவை குன்றுமே தவிர கூடவேகூடாது.

இயற்கையாக இருக்கும் க்ளூடமேட்டைப் போலவேதான் உற்பத்திசெய்யப்படும் க்ளூடமேட்டும் செய்யப்படுகிறது. உணவை கெட்டுப்போகாமல் வைத்திருக்க இது உதவுவதில்லை. சிலர் அப்படி நினைக்கிறார்கள். தவிர இதை உணவில் சேர்த்துக்கொண்டால் ஒவ்வாமை வரும், முடி உதிரும், ஆஸ்துமா நோயாளிகளுக்குக் கெடுதல், தலைவலி வரும் போன்ற எண்ணங்கள் நிலவுகின்றன. இவை விஞ்ஞானரீதியாக இன்னும் நிரூபிக்கப் படவில்லை. மனிதக் குடலுக்குத் தேவையான இயங்குசக்தி க்ளூடமேட்டிலிருந்து தான் பிரதானமாகக் கிடைக்கிறது.

மிகவும் அதிகமான ஆய்வுகட்குட்படுத்தப்பட்ட உணவுகளில் ஒன்றே MSG. அமெரிக்க உணவு மற்றும் மருந்து அலுவலகம் (U.S. Food and Drug Administration) 1958 ஆம் ஆண்டிலிருந்து இதனை பொதுவாய் பாதுகாப்பானது (Generally Recognized as Safe (GRAS)) என்கிறது. இதை சர்க்கரை, மிளகு, வினீகர் மற்றும் பேகிங் பௌடர் போன்றதே என்று வரையறுக்கிறது. இது தவிர, 1991ல் உலகச்சுகாதார நிறுவனம் (WORLD HEALTH ORGANISATION (WHO)), 1992ல் JECFA(The Council on Scientific Affairs of the American Medical Association) எனப்படும் அறிவியல் மற்றும் மருந்துக் கழகம் மற்றும் 1995ல் (The Federation of American Societies for Experimental Biology) FASEB எனப்படும் MSG யின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

பழங்கள், காய்கறிகள், பாலாடைக்கட்டி, பால், டொமேடோ சாஸ், காளான்கள், நூடில்ஸ், சைனீஸ் மற்றும் அசைவ உணவுகள் பலவற்றிலும் இருக்கும் இந்த ஏழாவது சுவையை இதுவரை அதுவும் ஒரு 'சுவை' யே என்று அறியாமலேயே நம்மில் பலர் சுவைத்து வந்திருக்கிறோம் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இல்லை?!

அன்புடன் ------ஜெயந்தி
---------------------------------------------------------


thanks:
marathadi e groups
marathadi.com


----------------------------------------------------------

கட்டுரைக்கு பின்னூட்டமாக ரமேஷ் அப்பாதுரை அவர்கள் எழுதியது-----

நன்றி ஜெயந்தி. முன்பு ஒரு கட்டுரையில் சுவைகள் ஆறு என்றாலும் அவைகள் ஏழாக இருக்கவேண்டும் என அனுமானித்து மரத்தடியில் கேட்டு
எழுதியிருந்தேன். கட்டுரையின் அடிப்படை நம் புலன்கள் உணர்வது எல்லாம் ஏழு வகைகளாக பிரிக்கலாம் என்பதே. ஏழு ஒலிகள்,ஏழு ஒளிகள் .ஏழு சுவைகள் என.... இதனை மேலும் வகைப்படுத்தினால் அவைகள் மேலும் 12கூறுகளாக இருக்க கூடும் என்பதே அந்தக்கட்டுரை.அதன் அடிப்படை ஒரு திருக்குறள்...

சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்ற ஐந்தின்
வகை தெரிவன் கட்டே உலகு
-(திருக்குறள்)

சுவைத்தல்,பார்த்தல்,தொட்டு உணர்தல்,கேட்டல்,முகர்தல் இந்த ஐம்புலன்களை ஆராய்ந்து அறிந்தவன் உலகை அறிந்தவனாகிறான் என்பதாக இந்த குறளின் விளக்கமாக நான் எடுத்துக்கொள்கிறேன். அப்படியானால் இந்த ஐம்புலன்களின் மூலம் மனிதன் என்ன செய்கிறான் என்பதனை இன்றைய விஞ்ஞானம் அறிந்த காரணிகள் மூலம் விளக்கமளிப்பதே இக்கட்டுரையாகும்.

இந்த ஐம்புலன்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. சுவைத்தல் ஏழு - புளிப்பு, இனிப்பு, உரைப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என அறுசுவைகளை நாம் உண்கிறோம். அறுசுவை எனக்கூறிப் பிட்டாலும் ஏழாவதாக ஒரு சுவையும் இருக்க வேண்டும். இதுவே அந்தக்கட்டுரையின் வரிகள்

அன்புடன்
ரமேஷ் அப்பாதுரை


-----------------------------------------------------------
என்னடா இது மூளையைப்பதிக்கும் என்றெல்லாம் சொல்கிறார்களே, இந்தப்பசங்க (my sons) ரெண்டும் கொஞ்சமும் கேட்காமல் சாஸ் என்ன, நூடில்ஸ் என்ன என்று ஒரு கைபார்க்கிறார்களே என்று ஆராயவே இணையத்தை மேய்ந்தேன். ஆராய்ச்சியில் அறிந்தது, MSG மூளையையோ இல்லை வேறு எந்த உறுப்பையோ பாதிப்பதாக விஞ்ஞானப்பூர்வமாய் இன்னமும் நிரூபிக்கப் படவில்லையாம். இதுவே என் தேடல் கொடுத்த பதில். நான் அறியாது இல்லை படிக்காது விட்டுப்போன சங்கதிகள் இருக்கலாம். யாரும் அறிந்தவர்கள் அறியத் தந்தால் நன்றியுடையவளாவேன்.

-------------------------------------------------------------


------ஜெயந்தி சங்கர்

Wednesday, February 02, 2005

மலேசிய மகுடம்


க்வாலலம்பூர் நகர மையத்தை (Kaula Lumpur ஸிடி ஸெண்டர்) அடைய 'எல் ஆர் டீ' அன்றழைக்கப்படும் விரைவுரயிலில் போகலாம். அங்கிருந்து நடக்கும் தூரத்தில் 'பெட்ரோநாஸ் இரட்டைக்கோபுரம்' . கட்டடத்திற்கு வெளியில் ஒரு பூங்கா இருக்கிறது. அங்கு மெதுவோட்டத்தடம் (jogging track), ஒளியூட்டப்பட்ட ஒரு நீரூற்று, குளம் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுத்திடல் இருக்கின்றன. திங்கள் தவிர மற்றநாட்களில் காலை 8.30 மணியிலிருந்து இலவச நுழைவுச்சீட்டுகள் கொடுக்கப்படுகின்றன. 1300 டிக்கெட்டுகள் வரை கொடுக்கிறார்கள். 41வது மாடிக்குமேலே போகப் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. வான்பாலத்திலிருந்து பார்த்தால், பள்ளிவாசல்கள், உயர்ரக விடுதிகள் போன்றவற்றைக் காண முடியும். வான்பாலத்தில் ஒரே நேரத்தில் அதிகபேர் போகாதிருக்க நேரக்கட்டுப்பாடு இருக்கிறது. இருப்பினும், நன்றாகப் பார்த்து ரசிக்கும் நேரம் நிச்சயம் நமக்குக் கிடைத்தேவிடுகிறது.

க்வாலலம்பூரை தலைநகராகவும், கலாசாரத் தலைமையகமாகவும், வணிக மையமாகவும் உலகுக்கு அறிவிக்கும் ஓர் உயர்ந்த கட்டமைப்புடைய கட்டடத்தைத்தான் அர்ஜெண்டீனக் கட்டடக்கலை வல்லுனர் செஸர் பெல்லியிடம் மலேசிய அரசாங்கமும் பெட்ரோநாஸ் நிறுவனமும் வேண்டினர். வல்லுனர் பணிபுரிவது ஓர் அமெரிக்க நிறுவனத்தின் கீழ். சிகாகோவின் 'சியர்ஸ் டவரை'விட உயரமாக இருக்கவேண்டும் என்ற நோக்கங்கள் எதுவுமே யாருக்கும் அப்போது இருக்கவில்லை. ஆனால், திட்டமிட்டு வரைபடம் தயாரித்த செஸர் பெல்லியே எதிர்பாராத அளவில் கட்டுமானத்தில் தனித்துவத்தையும் 'உலகின் ஆகஅதிக உயரமான' கட்டடம் என்றபெருமையும் 'பெட்ரோநாஸ் இரட்டைக்கோபுரம்' 1996 ஏப்ரல் 15 அன்றே பெற்றுவிட்டது.

இதன் வடிவமைப்பை திட்டமிட்டு வரைபடமாகக் கொடுக்க 1991 ஆம் ஆண்டு ஜூலையில் 8 கட்டுமான நிறுவனங்களிடம் கேட்கப்பட்டது. அது அனைத்துலக கட்டுமானவடிவமைப்புப் போட்டியாகவே உருவெடுத்தது. தனித்தவம் வாய்ந்த க்வாலலம்பூர் நகரின் வாயிலாக தோன்றக்கூடிய நவீன கலைநயத்தோடு கூடிய கட்டட அமைப்பையே எதிர்பார்த்தனர். மலேசியாவின் இறந்தகாலம் மற்றும் எதிர்காலங்களைப் பிரதிபலிப்பதாகவும் வரும்காலத்தில் மலேசிய அடையாளத்தோடு க்வாலலம்பூரின் சின்னமாகவே திகழும் என்று செஸர் பெல்லி அப்போதே நம்பிக்கையோடு தெரிவித்திருந்தார்.

இரண்டு கோபுரத்திற்கும் தனித்தனி கட்டுமான நிறுவனங்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இருகுழுக்களுக்குமே 300 மீட்டருக்குமேல் உயரக்கட்டடவேலையில் முன் அனுபவம் இல்லை. ஆரோக்கியமான போட்டியுடன் திறம்பட உழைத்திருக்கின்றனர். நினைத்த செலவில் குறித்த நேரத்தில் முடிக்கவேண்டிய சவால் இருந்தது. 37 மாதங்கள் ஆயிரக்கணக்கானோரின் கடுமையான உழைப்பில் நினைத்ததைவிடச் சீக்கிரமே கட்டுமானப்பணிகள் முடிந்திருக்கின்றன.

அஸ்திவாரத்திற்கு நிலத்தைத் தோண்டும் பணி 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. அதுவரையில் மலேசியாவில் பயன்படுத்தாத முறை இதற்குப் பயன்படுத்தப்பட்டது. தோண்டுவதற்கு பைலிங்குடன் ரா·ப்ட்டிங்க்கையும் இணைத்துச் செயல்பட்டனர். ஒவ்வொரு கோபுரத்தின் கீழும் 32,550 டன் எடையுள்ள கிரேட் 60 ஜல்லிக்கலவை (காங்கிரீட் ) இடப்பட்டுள்ளது. 60-115 மீட்டர் நீளங்களில் 104 பாரெட் பைல்களும் 4.5 மீட்டர் தடிமனுள்ள ரா·ப்டும் அஸ்திவாரத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மாத இடைவெளியில் மார்ச் 1994 முதல் கோபுரத்திற்கும் அதனை அடுத்து இரண்டாவது கோபுரத்திற்கும் அஸ்திவாரப்பணிகள் தொடங்கியது. 300,000 மெட்ரிக் டன் எடையுள்ள கோபுரத்தைத் தாங்கும்படி 21 மீட்டர் ஆழமுள்ள அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. 75 அடி நீளமும் 75 அடி அகலமும் உள்ள அஸ்திவாரத் தூண்களும் உபயோகிக்கப் பட்டுள்ளன. அஸ்திவாரப்பணிக்கு மட்டுமே ஒருவருடம் எடுத்தது.

1998 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட 1,483 அடி உயரம் கொண்ட 'பெட்ரோநாஸ்' கோபுரங்களைக் கட்ட 36,910 டன் இரும்பு (ஸ்டீல்) தேவைப்பட்டது. இது 3000 யானைகளைவிட அதிக எடை ! இந்த இரட்டைக்கோபுரத்தில் இருக்கும் 32,000 ஜன்னல்களை ஒருமுறை துடைத்துச் சுத்தம் செய்யவே ஒரு மாதமெடுக்கிறதாம். 1.6 பில்லியன் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட இந்தப் உலகப்பிரசித்திபெற்ற இரட்டைக்கோபுரம் 'எண்ட்ராப்மெண்ட்' என்ற படத்தில் வந்திருக்கிறது. 14,000-22,000 சதுரஅடி ஆபீஸ் இடம் ஒவ்வொரு தளத்திலும் உள்ளது. இது கிட்டத்தட்ட 70 ஏக்கர் நிலப்பரப்பில் அடங்கும் பரப்பளவு ஆகும்.

சாதாரணமாக 30 அல்லது 40 கிரேட் ஜல்லிக்கலவைதான் கட்டடங்களுக்கு உபயோகிக்கப்படும். ஆனால், மெலிந்த அதே சமயம் உயரமான உருவம் கொண்ட இக்கட்டடத்தைக் கட்ட பெரும்பாலும் உயருறுதிகொண்ட உயர் ரகமான 80 கிரேட் ஜல்லிக்கலவையை (காங்கிரீட் ) உபயோகித்துள்ளனர். முக்கிய ஜல்லிக்கலவைச் சுவரை எழுப்பியபிறகு 16 அடுக்குக் கம்பி மற்றும் பலகை (ஸ்லாபுகள்) அமைக்கப்பட்டு, பிறகு தரை மற்றும் மாடிப்படிக்கட்டுகள் அமைத்துள்ளனர்.

கட்டடக்கலைக்கே ஓர் அதிசயமான இந்த இரட்டைக் கோபுரக்கட்டடங்கள், எட்டுமூலை கொண்ட நட்சத்திர அமைப்பைக் கொண்டுள்ளன. இரண்டு சதுரங்கள் ஒன்றன்மீது ஒன்று வைத்தால் வருமல்லவா அத்தகைய எட்டுமூலை நட்சத்திரம் ! இது இஸ்லாமிய கட்டமைப்பு வகையில் வருகிறது. நட்சத்திரவடிவம் கட்டடத்தின் உயரம் வரை தொடர்கிறது. இது பாரம்பரிய மலேசிய இஸ்லாமிய வடிவத்திலிருந்து எழுந்த யோசனை. உறுதியையும் நளினத்தையும் பிரதிபலிக்கும் வகையில், இஸ்லாமிய வாஸ்த்துமுறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. நட்சத்திரத்தின் ஒரு முனை கூர்மையாகவும், அடுத்தமுனை மழுங்கலகவும், அதற்கடுத்தமுனை மறுபடியும் கூர்மையாக என்று மாற்றிமாற்றியமைத்துள்ளனர். உள்ளே நுழைந்ததுமே வண்ண அலங்கார விளக்குகளுடன் இந்த புதுவிதவடிவமும் கூடத்தின் தரை மற்றும் சுவர்களில் தெரியும். 88 தளங்களையுடைய இந்த இரட்டைக்கோபுரம் 42வது தளத்தில் இடையில் ஒரு பாலத்தைக் கொண்டிருக்கிறது. இரட்டைத் தளங்களைக் கொண்ட இந்தப்பாலம் 192 அடி நீளம் கொண்டது. இது இரண்டு கட்டடங்களுக்கிடையே மக்களுக்குப் போக்குவரத்து வசதியை அளிக்கிறது. கட்டடங்களில் இருக்கும் இரண்டு வானம்பார்த்த மொட்டைமாடிகளை இணைக்கிறது. நகருக்குச் செல்லும் வாயிலைப்போன்ற தோற்றம் வேறு ! 493 பாகங்கள் கொண்ட இந்தப்பாலம் கொரியநாட்டில் சாம்சங்க் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. முழுவதும் பொருத்திச்சரிபார்த்து, பின்னர் மீண்டும் பாகங்கள் கழற்றப்பட்டு கப்பலில் க்வாலலம்பூருக்கு அனுப்பப்பட்டது.

தயாராகக் கட்டிமுடித்த நிலையில் இந்த வான்பாலம் கொரியநாட்டிலிருந்து 1995 மேமாதம் கட்டடத்தளத்தை அடைந்தது. அதே வருடம் ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று அதனை உயரத் தூக்கும் பணி தொடங்கியது. இத்தகைய பாலங்கள் பற்றிய ஐம்பதாண்டு ஆய்வறிக்கைகளில் காணப்படும் எடைதாங்கும் திறன், காற்று போன்ற வானிலை மாற்றங்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் போன்றவற்றை ஒருவருடகாலம் அமெரிக்கா, கொரியா போன்ற நாடுகளில் பலவிதமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காகவே VSL ஹெவி லி·ப்டிங்க் என்னும் தேர்ந்த நிறுவனம் ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த நிறுவனம் பாலத்தை 41வது மாடிக்குத்தூக்கிப் பொருத்தும் பணியையும் மேற்கொண்டது.

இரட்சத பாரந்தூக்கியின் (கிரேன்) உதவியால் மேலேதூக்கி உரிய இடத்திற்குக்கொண்டுபோனதும் கண்ட்ரோல் கம்பிவடத்தின் (கேபில் -cable) உதவியோடு 29 வது மாடியில் இருக்கும் பேரிங்குகளில் பொருத்தப்பட்டது. மூன்றுநாட்களில் உரிய இடத்தில் பொருத்தப்பட்டது. 41வது மாடியில் இருக்கும் 750 டன் எடைகொண்ட இந்தப் பாலத்தைத்தாங்குவதற்கு 29வது மாடிகளில் இரண்டு கால்கள் போன்ற அமைப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு காலும் 42.6 மீட்டர் நீளமும் 60 டன் எடையும் கொண்டவை. இந்தக்கால்கள் தங்கள் இருமுனைகளிலும் பால்பேரிங்குகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்றுக்கொன்று நெருங்கியும் விலகியும் அசைந்துகொடுத்து எடையைத் தாங்குகிறது. வான்பாலத்திலிருந்து கீழேபார்ப்பது புத்தம்புது அனுபவம். அங்கிருந்து கட்டடத்தைப்பார்த்தால், அது வெள்ளிக் கோபுரமாய் மின்னுகிறது. புகைப்படப்பிரியர்கள் விதவிதமாகச்சுட்டுத் தள்ளலாம்.
73 வது தளம் வரை வடிவத்திலும் தளத்தின் தரத்திலும் மாற்றமே இல்லை. ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதுவரை கட்டுமானப்பணியில் பெரியசவால்கள் இருக்கவில்லை. அதன்பிறகுதான் அளவு குறைந்துகொண்டே வரும். நிழலுக்கென்று கட்டடத்தின் வெளிச்சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் நிழற்சட்டங்கள் (சன் ஷேட்கள்) வெள்ளிநாடா (ரிப்பன்) கட்டிய அழகான தோற்றத்தைக்கொடுக்கின்றன. 1994ல் தொடங்கிய பூச்சுப்பணிகளின் போதுதான் 83,500 சதுரமீட்டர் இரும்புத் (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) தகடுகள் மற்றும் 55,000 சதுரமீட்டர் கண்ணாடிகள் பயன்படுத்தி செஸர் பெல்லியின் கற்பனையில் உதித்த 'சூரிய ஒளியில் மின்னும் வைரமாக'க் கட்டடத்தை உருவாக்கியுள்ளனர்.

உச்சி கோபுரத்தைப்பொருத்தும் வேலையைத்தவிர மீதிவேலைகளெல்லாம் பிப்ரவரி 1996ல் முடிந்தது. அதன்பிறகு இரண்டு கட்டடங்களுக்கும் ஒருமாதத்தில் கோபுரமும் பொருத்தப்பட்டு, பூச்சுவேலை தொடங்கியது. 1996 ஜூனில் அது நிறைவுற்றது. எண்களிடப்பட்ட 24 பகுதிகள் இரட்சத பாரந்தூக்கியின்(கிரேன்) மூலம் ஒவ்வொன்றாக ஏற்றப்பட்டபிறகு வெவ்வேறு அளவிலான 14 வளையங்களை ஏற்றிக் கடைசியில் அலைவாங்கியையும் (ஆண்டெனா) ஏற்றிப் பொருத்தியுள்ளனர். உச்சிக்கோபுரம் செஸர் பெல்லியின் கற்பனையின் அடிப்பையில் மின்னும் வெள்ளி வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதன்மேல் விழும் ஒளி நேர்கோட்டில் பிரதிபலிக்கும். இது கட்டடங்களை இன்னும் அதிக உயரமாகக்காட்டுகிறது.
28 ஆகஸ்ட் 1999 அன்றுதான் பெட்ரோநாஸ் இரட்டைக்கோபுரம் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. வாணவேடிக்கைகளுடன் கோலாகலமான விழாவாக அது அமைந்தது. நாலுகால்ப் பாய்ச்சலில் இருந்த நாட்டின் பொருளியல் வளர்ச்சியையும், அடுத்த ஆயிரத்தில் நாடு சாதிக்கவிருக்கும் இலக்குகளையும் பிரதிபலிக்கும் படியிருந்தது இரட்டைக்கோபுரம். ஆயிரம் வெளிநாட்டு விருந்தினர்கள் கூடியிருந்தனர். பலநிலையிலிருந்தும் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் ஜலான் அம்பங்க் மற்றும் ஜலான் பி.ராம்லி ஆகிய சாலைகளில் திரண்டனர். மேலே அண்ணாந்து பார்த்ததில் வந்த கழுத்துவலியையும் பொருட்படுத்தாது கூடியிருந்தனர். கோவில் கும்பாபிஷேகவிழாவைப்போலவே இங்கும் கோபுர வான்பாலத்தில்தானே முக்கியக் கோலாகலம். அங்குதான் லேசர் ஒளிக்கதிர்களால் ஆன அலங்காரங்கள் வேறு. பாலத்திலிருந்து பார்த்தால், க்வாலலம்பூரே கண்முன் விரிகிறது. சிறிய அளவில் தலைகள் மட்டுமே தெரிகின்றன. இரவிலோ மின்விளக்குகளின் சிதறல்களோடு நகரம் காணக் கண்கொள்ளாக்காட்சி ! 2001 செப்டம்பர் 11 வாக்கில் பாதுகாப்பிற்காகக் கொஞ்சகாலம் பொதுமக்களின் பார்வைக்கு மூடிவைக்கப்பட்டிருந்தது.

முன்னாள் பிரதமர் டத்தோசிரி டாக்டர். மஹாதிர் மொஹமத் கட்டடத்தைத் திறந்துவைத்தார். வேளாண்மையையும், டின் சுரங்கங்களையும், ரப்பர்தோட்டங்களையுமே நம்பியிருந்த நாடு கடந்துவந்தபாதையையும் அதன் பொதுவளர்ச்சியையும் தொழில்வளர்ச்சியையும் பிரதிபலிக்கும்வகையில் தேசியதினத்தன்று திறந்துவைத்தார். 'A Vision Realized' என்ற ஐந்து நிமிட ஒலிஒளிகளைக்காட்சி நாட்டின் பெருமைகளை நினைவூட்டியது. இருகரங்கள் கோர்த்ததுபோன்ற மின்விளக்காலான சிற்பம் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. முக்கிய மூன்று இனங்களான மலாய், சீன, இந்திய இனங்களைக் குறிக்கும்வகையில் மூன்று துடுப்புகள் போன்ற வடிவங்கள் அதிலுள்ளன. ஒரு மின்விளக்கை அதில் பொருத்தி கட்டடத்தைத் திறந்தார் பிரதமர். இராட்சதத் திரையில் பிரதமரின் கையொப்பம் மக்களுக்குக் காட்டப்பட்டது. விழாவிற்காகவே புகழ்பெற்ற மலாய் கவிஞர் ஏ. சமாட் சையத் எழுதிய கவிதை பெட்ரோநாஸ் ஊழியர் ஒருவரால் வாசிக்கப்பட்டு, பள்ளிக் குழந்தைகளின் ஆடல்பாடலுடன் விழா களைகட்டியது. தேசபக்திப் பாடல்களும் பாடப்பட்டன.

மதம் மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக நம்பப்படும் இந்த உலக அதிசயத்தின் உரிமையாளர் க்வாலலம்பூர் ஸிடி ஹோல்டிங்க்ஸ் செண்டிரியன் பெர்ஹாட் என்னும் நிறுவனம். இரட்டைக்கோபுரத்தின் பெரும்பகுதியை பெட்ரோநாஸ் என்னும் பெட்ரோலிய நிறுவனத்தின் அலுவலகங்கள் நிறைத்துள்ளன. எஞ்சிய பகுதிகள் மட்டுமே மற்ற பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சில வர்த்தகர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. பிரபல மைக்ரோச·ப்ட் நிறுவனம் இரண்டாவது கட்டடத்தின் 30 வது மாடியில் இயங்குகிறது.
864 இருக்கைகளைக்கொண்ட பெரிய அரங்கம், அங்காடிக்கடைகள், பெட்ரோநாஸ் அறிவியல்கூடம், ஓவியக் காட்சிக்கூடம் போன்ற பல்வேறு இடங்களையும் கண்டுகளிக்கலாம். கட்டடம் கட்டப்பட்டுள்ள பரப்பளவு 341,760 சதுர அடிகள். ஆனால், உள்ளே 88 தளத்திலும் சேர்த்து மொத்தப்பரப்பளவு எட்டு மில்லியம் சதுர அடிகள். இந்தக்கட்டடத்தில் ஒரு பெட்ரோலியம் அருங்காட்சியகம், ஒரு பள்ளிவாசல், நூலகம், ஒரு இசைக் (சிம்·பனி) கூடம், 4500 கார்களை நிறுத்தக்கூடிய பாதாள வாகனநிறுத்துமிடம் ஆகியவையுமுண்டு. இங்கு இருக்கும் இசைக்கூடத்தில் 'க்ளைஸ் பைப் ஆர்கன்' என்னும் இசைக்கருவியிருக்கிறது. இது 4740 குழல்களையுடையது.

சிகாகோவின் 'சியர்ஸ் டவரை'விட 33 அடிகள் உயரம் அதிகம் கொண்டிருக்கிறது இந்த இரட்டைக்கோபுரம். ஆனால், இதிலும் ஒரு சர்ச்சையுண்டு. 88 வது தளத்திற்குப்பிறகு உருண்டைவடிவ உச்சிகோபுரம் மற்றும் அலைவாங்கி (ஆண்டெனா) இருக்கின்றன. இவற்றைக் கணக்கில் கொண்டால்தான் பெட்ரோநாஸ் இரட்டைக்கோபுரம் உலகின் மிக உயரமான கட்டடமாகும். ஆனால், உபயோகிக்கக்கூடிய தளரீதியில் பார்த்தால், அதற்கு அந்தப்பெருமை கிடைக்காது என்பதே இவர்கள் வாதம். சிகாகோவின் 'சியர்ஸ் டவரின்' உபயோகிக்கப்படும் தளம் பெட்ரோநாஸின் உபயோகிப்படும் தளத்தைவிட உயரம் அதிகம் என்கிறார்கள் இவர்கள். ஆனால், இதே சர்ச்சையாளர்கள் இந்த இரட்டைக்கோபுரத்தின் கட்டுமானம் மற்றும் அழகை மனந்திறந்து பாராட்டுகிறார்கள்.
குறைந்த இடத்தில் நிறைந்த சேவையாற்றும் நோக்கில் இந்தக் கட்டடத்திலிருக்கும் 76 மின்தூக்கிகளில் 58 இரட்டைத்தள மின்தூக்கிகள். ஒன்றன்மேல் ஒன்றாக இரண்டு மின்தூக்கிப் பெட்டிகள் இருக்கும். ஒவ்வொன்றும் 26 ஆட்களை ஏற்றிச்செல்லும். கிட்டத்தட்ட 3.5 முதல் 7 வினாடிகளில் மேல்தளத்தையடையக் கூடியவை இந்த மின்தூக்கிகள்.

அழைபேசி (இண்டர்காம்), எச்சரிக்கை மணி கொண்ட பாதுகாப்புவலை(செக்யூரி அலார்ம்), மூடிய மின்சுற்று(க்ளோஸ் சர்க்யூட்) தொலைக்காட்சிவழிப் பாதுகாப்பு, நிழற்படங்களை அடையாளம் காணக்கூடிய சாதனங்கள் போன்றவற்றைக்கொண்ட குறும்பரப்பு வலையமைப்பு (LAN-local area network) எனப்படும் அதிநவீனப் பாதுகாப்பு வசதிகள் இரட்டைக்கோபுரத்தில் உண்டு. இது தவிர, குளிசாதன இயக்கக் கட்டுப்பாடு, ஒளிக்கட்டுப்பாடு, தீச்சம்பவங்கள் போன்றவற்றிலிருந்து மக்கள் தப்பிக்க உயிர்ப்பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவையும் சிறந்தமுறையில் செய்யப்பட்டுள்ளன. புகையைக் கட்டுப் படுத்தும் கருவியும் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு தளம் தீயினால் பாதிக்கப்பட்டால், மற்ற தளங்களுக்குப் பரவிவிடாமல் தகுந்த காற்றழுத்தத்தை ஏற்படுத்தி தீ பரவாது தடுக்கப்படும்.

ஏர்கண்டிஷனுக்கு மட்டும் 30,000 டன் குளிர்விக்கப்பட்ட நீர் உபயோகப்படுத்துகிறார்கள். நீர்மறுபயனீட்டுமுறை கையாளப்படுகிறது. இதற்கு இயற்கை எரிவாயுகொண்டு இயக்கும் நீராவி டர்பைன்கள் பயன்படுத்தப்படுகின்றன. தளவாரியாக இந்த குளிர்சாதனத்தை இயக்குவதால், இயந்திரக் கோளாறுகளோ, மின்தடையோ ஏற்பட்டாலும் துல்லியமாகக்கண்டறிந்து சீர்செய்யவும் பழுதுபார்க்கவும் முடியும். மொத்தக் கட்டடமே பாதிப்படையும் சாத்தியத்தையும் தவிர்க்கமுடிகிறது. மின் இணைப்புகள் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கேற்றாற்போலவே வடிவமைத்திருக்கிறார்கள். ஒளிக்காட்சிக் கருத்தரங்கு(வீடியோ கான்·பரன்ஸிங்க்), தொலைபேசி, மின்மடல் போன்ற எல்லா வசதிகளும் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்பத்தின் ஆகநவீனங்கள் எல்லாவற்றையும் இங்கு காண முடியும்.

விண்ணைத்தொட நினைக்கும் மனிதனின் ஆர்வம் உலகெங்கிலும் உள்ள உயரமானபல கட்டடங்களில் தெள்ளத்தெளிவாகத் புலப்படுகின்றது. வடிவமைக்கவும் திட்டமிடவுமே பெருமுயற்சியும் கற்பனைத்திறனும் தேவை. கட்டிமுடித்துக் கண்முன்னே நிறுத்துவது என்பது மிகமிகப்பெரிய சவால். இதுவரை மனிதன் சாதிக்காத சாதனையாகியிருக்கிறது மலேசியாவின் இரட்டைக்கோபுரமான 'பெட்ரோநாஸ் ட்வின் டவர்'. கட்டட அமைப்பின் ஆகப்புதிய தொழில்நுட்பங்களுக்கு உதாரணமாகத் திகழ்கிறது இந்த நவீன அதிசயம். மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் கட்டமைப்பாக அமைந்துள்ளது. உயரமான கட்டடங்களில் ஏறிப்பார்த்த அனுபவம் உள்ளவர்களுக்கு ஒருவேளை உயரத்தினால் பெரிய 'அனுபவம்' கிடைக்காது போகலாம். ஆனால், வெயிலிலோ, மின்விளக்கிலோ பனிக்கட்டியினால் செய்யப்பட்டதுபோன்று மின்னும் இரட்டைக்கோபுரங்கள் மனதைக்கொள்ளை கொள்ளத்தவறாது.

அதிவேகவிமானம் (ஜும்போ ஜெட்), நுண்சில்லு (மைக்ரோச்சிப்), செயற்கை இருதயம் என்று அறிவியலும் தொழில் நுட்பமும் ராக்கெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் உலகில் கட்டட அமைப்பில் அற்புதம் நிகழ்த்துவது மிகப்பெரும் சவாலாக இருந்தது சமீபத்தில். அந்தச் சவாலை செஸர் பெல்லியின் 'பெட்ரோநாஸ் இரட்டைக் கோபுரம்' வென்றுள்ளது என்றே சொல்லவேண்டும்.

----- ஜெயந்தி சங்கர்

அமுதசுரபி- நவம்பர்-2004/திண்ணை